மராத்தே இடஒதுக்கீடு- கெடு முடிந்தது! மீண்டும் சாகும் வரை உண்ணாவிரதம்- மனோஜ் ஜரங்கே அறிவிப்பால் பரபர!
மும்பை: மராத்தே ஜாதியினருக்கான இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மீண்டும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை சமூக செயற்பாட்டாளர் மனோஜ் ஜரங்கே பாட்டீல் தொடங்கி இருப்பது மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவின் மண்ணின் மக்களாகிய மராத்தா ஜாதியினர் நீண்டகாலமாக கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி போராடுகின்றனர். 2018-ம் ஆண்டு மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் வெடித்த போது 10 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதனால் மராத்தா ஜாதியினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் மகாராஷ்டிரா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இதனால் மராத்தா இட ஒதுக்கீடு கானல் நீராகவே இருக்கிறது.

அண்மையில் மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் புதிய வேகம் எடுத்திருக்கிறது. மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டம், அன்டர்வாலியில் மராத்தா இடஒதுக்கீடு கோரி பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்றது. அப்போது மனோஜ் ஜரங்கே பாட்டீல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்தப் போராட்டத்தை ஒடுக்க போலீஸ் இறக்கிவிடப்பட்டது. இதனால் பெரும் வன்முறையும் வெடித்தது. அப்போது முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் குன்பி இன மக்களுக்கு தரக் கூடிய இதர பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ், மராத்தா ஜாதியினருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனை ஏற்று தம்முடைய உண்ணாவிரதத்தை கைவிட்ட மனோஜ் ஜாரங்கே, அரசின் உறுதிமொழியை நிறைவேற்ற அக்டோபர் 24-ந் தேதி கெடு விதித்திருந்தார்.
தற்போது இந்த கெடு முடிவடைந்துவிட்டது. ஆனாலும் குன்பி சான்றிதழ் இன்னமும் மராத்தா மக்களுக்கு வழங்கப்படவில்லை. இந்த கால கட்டத்தில் மராத்தா ஜாதி இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து தாம் மீண்டும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளார் மனோஜ் ஜரங்கே பாட்டீல். அந்தர்வாலி அல்லது அண்டர்வாலி கிராமத்தில் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை மனோஜ் ஜாரங்கே தொடங்கி இருக்கிறார். எங்களுடைய இந்த அமைதி வழிப் போராட்டத்தை ஆளும் அரசாங்கம் எதிர்கொள்ள முடியாது எனவும் மனோஜ் ஜரங்கே ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். இது மகாராஷ்டிராவில் ஆளும் அரசுக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது.












Click it and Unblock the Notifications