மராத்தி vs கன்னடம்: மகாராஷ்டிரா- கர்நாடகா எல்லையில் பதற்றம்- காலவரையின்றி பேருந்துகள் நிறுத்தம்!
மும்பை: மராத்தி மற்றும் கன்னட மொழி பிரச்சனையால் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா இடையேயான பேருந்து சேவைகள் காலவரையின்றி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிரா, கர்நாடகா எல்லை மாவட்டங்களில் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது.
கர்நாடகாவின் பெலகாவி உள்ளிட்ட எல்லை பகுதிகளில் மராத்தி மொழி பேசுகிற மக்கள் அதிக எண்ணிகையில் வசிக்கின்றனர். இதனால் பெலகாவி உள்ளிட்ட பகுதிகளை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இதற்கு கர்நாடகா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் எல்லைப் பகுதியில் இயக்கப்பட்ட கர்நாடகா மாநில அரசு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை மராத்தி மொழியில் பேச வலியுறுத்தி ஒரு கும்பல் கொடூரமாக தாக்கியது. இதற்கு பதிலடியாக பெங்களூரில் இருந்து மும்பை நோக்கி சென்ற மகாராஷ்டிரா பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை கன்னட ரக்ஷன வேதிகே என்ற கன்னட மொழி அமைப்பினர் தாக்கினர். இதனால் இரு மாநில எல்லைகளில் பதற்றம் ஏற்பட்டது.
மேலும் கர்நாடகாவுக்கு எந்த மகாராஷ்டிரா அரசு பேருந்தும் இயக்கப்படமாட்டாது; இந்த பிரச்சனைக்கு கர்நாடகா அரசு உரிய தீர்வு காணும் வரை பேருந்துகளை இயக்க முடியாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மகாராஷ்டிரா போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் கூறுகையில், கன்னட அமைப்பினரால் தாக்கப்பட்ட கறுப்பு மை பூசப்பட்ட ஓட்டுநர், நடத்துநர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களிடம் தொலைபேசியில் பேசி இருக்கிறேன். பாதிக்கப்பட்ட ஓட்டுநர்,நடத்துநருக்கு ஆதரவாக மகாராஷ்டிரா அரசு உறுதியாக நிற்கும். இந்த பிரச்சனையில் கர்நாடகா அரசு தெளிவான நிலைப்பாடு எடுக்கும் வரை அம்மாநிலத்துக்கு மகாராஷ்டிரா அரசு பேருந்துகளை இயக்கமாட்டோம் என்றார்.
மகாராஷ்டிரா- கர்நாடகா எல்லையான கோலாப்பூர் மாவட்டம் காகல் வரையிலேயே அனைத்து மகாராஷ்டிரா அரசு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதேபோல கர்நாடகா அரசு பேருந்துகளும் பெலகாவி மாவட்டத்தின் எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இரு மாநில எல்லைகளிலும் அசம்பாவிதங்கள் தொடராத வகையில் பாதுகாப்புக்கு போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications