ஹேப்பி நியூஸ்! இனி மாஸ்க் தேவையில்லை.. மகாராஷ்டிராவில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கம்
மும்பை: கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் தொட்ராபக மகாராஷ்டிர அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சீனாவில் கடந்த 2019 இறுதியில் முதலில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், இன்னும் முழுமையாக அழிக்கப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக உலக நாடுகளை இந்த கொரோனா வைரஸ் தான் அலறவிட்டுக் கொண்டு இருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரைக் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா வைரஸ் பரவியது. அதன் பின்னர் டெல்டா கொரோனாவால் 2ஆம் அலையும், ஓமிக்ரான் கொரோனாவால் 3ஆம் அலையும் நாட்டில் ஏற்பட்டது.

கொரோனா வைரஸ்
கொரோனா பரவல் காரணமாக நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பொது இடங்களுக்குச் செல்ல 2 டோஸ் தடுப்பூசி, மாஸ்க் உள்ளிட்டவை கட்டாயம் என அறிவிக்கப்பட்டன. கொரோனா உயிரிழப்பைத் தடுப்பதில் வேக்சின் முக்கியம் என்றால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் மாஸ்க் முக்கியமாக இருந்தன. கிட்டதட்ட நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பொது இடங்களுக்குச் செல்ல மாஸ்க் கட்டாயம் என்ற விதி உள்ளது.

மகாராஷ்டிரா
இதற்கிடையே ஓமிக்ரான் கொரோனாவுக்கு பின்னர் நாட்டில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வருகிறது. கொரோனா முதல் அலையிலும் சரி, 2ஆம் அலையிலும் சரி மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்ட மாநிலங்களில் ஒன்றாக மகாராஷ்டிரா இருந்தது. அங்கும் கூட கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வருகிறது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 183 பேருக்கு மட்டுமே கொரோனா கண்டறியப்பட்டது. 219 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், ஒருவர் மட்டுமே வைரசால் உயிரிழந்துள்ளனர்.

கட்டுப்பாடுகள் நீக்கம்
வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கொரோனா தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் வரும் சனிக்கிழமை முதல் நீக்குவதாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. பொது இடங்களில் மக்கள் மாஸ்க் பயன்படுத்த வேண்டும் என்பது அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாலும் கூட, அது கட்டாயமாக இருக்காது என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா புத்தாண்டு வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 2) கொண்டாடப்பட உள்ள நிலையில், அந்த நாளில் இருந்து கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தவ் தாக்கரே
இது குறித்து மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தனது ட்விட்டர் பக்கத்தில், "புத்தாண்டு முதல் மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து கோவிட் கட்டுப்பாடுகளும் நீக்கப்படும்!" என்று ட்வீட் செய்துள்ளார். மகாராஷ்டிர முதல்வர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications