மகாராஷ்டிராவில் உச்சத்தில் கொரோனா.. புலம்பொய்ந்த தொழிலாளர்களே காரணம்..தாக்கரே பரபரப்பு குற்றச்சாட்டு
மும்பை: மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்குப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களே காரணம் என்று மகாராஷ்டிரா நவ்னிர்மன் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்குத் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.
குறிப்பாக, மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு மிக மோசமாக உள்ளது. இந்தியாவில் தற்போதுள்ள வைரஸ் பாதிப்பில் சுமார் 55% மேல் மகாராஷ்டிராவில் மட்டும் உள்ளது.

அவசர ஆலோசனை
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறித்து முக்கிய கட்சித் தலைவர்களுடன் நேற்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார். இதில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதற்குக் காரணங்கள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் மகாராஷ்டிரா நவ்னிர்மன் சேனா கட்சித் தலைவரும் முதல்வர் உத்தவ் தக்கரேவின் சகோதரருமான ராஜ் தாக்கரே கலந்து கொண்டார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜ் தாக்கரே, இந்தியாவில் மிகவும் தொழில் மயமாக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இதனால் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்ய இங்கு வருகிறார்கள். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட போது, இவர்கள் அனைவரும் சொந்த மாநிலங்களுக்குச் சென்றனர். பின், இவர்கள் திரும்பி வந்தபோது, முறையான கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யவில்லை. இதுவே வைரஸ் பாதிப்பு அதிகரிக்கக் காரணமாக இருக்கலாம் என்று கூறினார்.

மீண்டும் லாக்டவுன்
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்ததைத் தொடர்ந்து அங்கு மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களிலும், வார இறுதி நாட்களிலும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற கடைகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்கலாம் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

அரசை சாடும் ராஜ் தாக்கரே
இது குறித்துப் பேசிய ராஜ் தாக்கரே, கடைகள் அனைத்தும் மூட்டப்பட்டிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள அரசு, தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்க அனுமதி அளித்துள்ளது. அனைத்து கடைகளும் மூடப்பட்ட பின், எதற்காக யாருக்காக உற்பத்தி செய்ய வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று நாட்களாவது கடைகள் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா கொரோனா பாதிப்பு
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்குக் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 55, 469 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல 297 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அங்கு சுமார் 4.72 லட்சம் பேர் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருகின்றனர். தலைநகர் மும்பையில் மட்டும் 10,030 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications