பிரதமர் மோடி பற்றிய புத்தகம்.. மேலாண்மை புத்தகமாக பயன்படுத்தலாம்.. சொல்கிறார் நிர்மலா சீதாராமன்!
மும்பை: பிரதமர் மோடி குறித்த புத்தகத்தை மேலாண்மை படிப்புகளில் பாடப்புத்தகமாக பயன்படுத்தலாம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி குறித்த "மோடி@20: ட்ரிம்ஸ் மீட் டெலிவரி" என்ற புத்தகத்தை முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த மே மாதம் வெளியிட்டார். இந்த புத்தகத்தை ரூபா பப்ளிகேஷன்ஸ் இந்தியா என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பிரபல அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களான நந்தன் நிலேகனி, சுதா மூர்த்தி, சத்குரு, பி.வி.சிந்து மற்றும் அமிஷ் திரிபாதி உள்ளிட்டோர் இந்த புத்தகத்தை எழுதியுள்ளனர். இந்த புத்தகத்தில் பிரதமர் மோடியின் தலைமையில் நாட்டில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள், மக்களின் வாழ்க்கைப் பயணத்தில் பாஜக அரசின் பங்கு, பிரதமரின் திட்டங்களால் மக்களுக்கு ஏற்பட்ட பயன்கள், பல்வேறு சமூகங்களுக்கு தேவையான உதவிகள் ஆகியவை குறித்து பேசப்பட்டுள்ளன.

மோடி பற்றிய புத்தகம்
"மோடி@20: ட்ரிம்ஸ் மீட் டெலிவரி" புத்தகம் குறித்து பாஜக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், மும்பை பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'மோடி@20: ட்ரீம்ஸ் மீட் டெலிவரி' என்ற புத்தகம் குறித்த நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.

நிர்மலா சீதாராமன் பேச்சு
இதனைத்தொடர்ந்து இந்த புத்தகம் குறித்து நிர்மலா சீதாராமன் பேசுகையில், இந்தியா போன்ற நாடுகளில் சிக்கலான பொருளாதார சூழ்நிலைகளில் நவீன கால ஆட்சி எப்படி நடக்கும் என்பதை இந்த புத்தகத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதன் மூலம் தலைவர்கள் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். பிரதமர் மோடி குறித்த இந்த புத்தகத்தை மேலாண்மை படிப்புகளில் பாடப்புத்தகமாக பயன்படுத்தலாம் என்று தெரிவித்தார்.

20 ஆண்டுகள் நிறைவு
தொடர்ந்து பிரதமர் மோடியின் தலைமைப் பண்பு குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், ஒரு அரசாங்கத்தின் தலைவராக பிரதமர் மோடி 20 ஆண்டுகளை 2021ம் ஆண்டுடன் நிறைவு செய்துள்ளார். 2001ம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி, 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றார். அவரின் தலைமையில் பாஜக அரசின் பயணமும் தொடர்ந்து வருகிறது. 20 ஆண்டுகளாக அரசின் தலைமையிடமாக பணியாற்றிய அனுபவங்கள் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளன.

கடைசி ஏழைக்கும் திட்டம்
ஏழைகளுக்கான அனைத்து திட்டங்களும் நாட்டின் கடைசியில் நிற்கும் பயனாளிகளுக்கும் வெளிப்படைத் தன்மையுடன் கிடைக்கும் வகையில் திட்டமிடுகிறார். இது சாதாரண காரியம் அல்ல. ஒவ்வொரு தொழில்நுட்பத்தையும் புரிந்துகொண்டு, அதனை மக்களுக்கான திட்டங்களில் புகுத்திவிடுகிறார் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications