மோடி 2 மணி நேரம் மட்டுமே தூங்குவார்... தூங்காமல் இருக்க வித்தையும் கற்கிறார் - மகா. பாஜக தலைவர்!
மும்பை: பிரதமர் நரேந்திர மோடி ஒருநாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே தூங்குவதாக மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் தெரிவித்து இருக்கிறார்.
கோலாப்பூர் வடக்கு தொகுதியில் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகளில் அம்மாநில அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
இதற்காக ஒருங்கிணைக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் கூட்டத்தில் சந்திரகாந்த் பாட்டில் உரையாற்றினார்.
பிரதமர் மோடி ஜப்பான் பிரதமருடன் “ஆக்கப்பூர்வ” பேச்சு.. இரு தரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை..!
மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. மனைவிக்கு வாய்ப்பு
அப்போது பேசிய அவர், "கோலாப்பூர் இடைத்தேர்தலில் சத்யஜித் கடமின் வேட்புமனுவை பாஜக தேசிய தலைமைக்கு அனுப்பி பரிந்துரை செய்திருக்கிறோம். மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. சந்திரகாந்த் ஜாதவின் மனைவி இந்த தேர்தலில் போட்டியிட தயாராக இருந்தால் அவருக்கும் வேட்பு மனு வழங்கப்படும்.
2024 மக்களவைத் தேர்தலில் வெல்ல வேண்டும்
நாடாளுமன்றத்தில் நாம் வகுத்துள்ள பல திட்டங்களை செய்து முடிப்பதற்கு மூன்றில் ஒரு பங்கு பெரும்பான்மை கட்டாயம் தேவை. அதற்காக என்ன செய்ய வேண்டும் என நான் நன்கு அறிந்து வைத்து இருக்கிறேன். எனவே அவரவருக்கு வழங்கப்பட்ட வேலையை திறன்பட செய்யுங்கள். 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் நீங்கள் முழு ஈடுபட்டை காட்ட வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி 60 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கி உதவி இருக்கிறார். இது இவ்வுலத்திற்கு எவ்வளவு பயனுள்ள செயல் என்பதை நாம் அறிவோம்.
மோடி ஆட்சியில் இந்துக்கள் ஆதிக்கம்
இந்தியாவில் இதற்கு முன் 2 முறை இந்துக்கள் ஆதிக்கம் ஓங்கி இருந்தது. முதல்முறை பிரித்விராஜ் சவுகான் காலத்தில் இந்துக்கள் ஆதிக்கம் இருந்தது. 2 வது முறை சத்ரபதி சிவாஜி காலத்தில் இந்துக்கள் இந்தியாவில் ஆதிக்கம் ஓங்கியது. தற்போது பிரதமர் நரேந்திர மோடி காலத்தில் இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதற்காக நான் சத்ரபதி சிவாஜியுடன் நரேந்திர மோடியை ஒப்பிட்டு பேசுகிறேன் என்று நினைத்துவிட வேண்டாம்.
தூக்கத்தை தவிர்க்க வித்தை கற்கும் மோடி
பிரதமர் நரேந்திர மோடி 24 மணி நேரமும் நாட்டுக்காக உழைக்க தூங்காமல் இருப்பதற்கு பல்வேறு வித்தைகளை கற்று வருகிறார். தற்போது ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டும் தூங்கும் அவர், இனி 24 மணி நேரமும் தூங்காமல் இருப்பார். 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றிபெற அனைவரும் உழைக்க வேண்டும்." என்றார்.