நீங்க எல்லாம் டாக்டருக்கு படிச்சு என்ன செய்யப்போறீங்க- சாதியை சொல்லி சாகடித்த சீனியர்ஸ்
மும்பையில் சாதியை சொல்லி திட்டியதோடு ராகிங் செய்த சீனியர் மாணவிகளின் கொடுமை தாங்காமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் ஒரு மருத்துவ மாணவி. மராட்டிய மாநிலயத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப
மும்பை: நீயெல்லாம் எதுக்கு டாக்டருக்கு படிக்க வந்தே என்று சாதியை சொல்லி ராக்கிங் செய்த சீனியர்களால் எம்பிபிஎஸ் படித்து விட்டு மருத்துவ உயர்படிப்பு படித்த மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மும்பையில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கிய இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது. #JusticeForPayal என்ற ஹேஸ்டாக் பதிவிட்டு தங்களின் குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மராட்டிய மாநிலம் ஜல்கான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாயல் தத்வி, 26 வயதாகும் அந்த இளம்பெண் ஆதிவாசி பழங்குடியின சமூகத்தில் இருந்து முதல்முறையாக எம்பிபிஎஸ் முடித்து டாக்டரானார். கடந்த ஆண்டு மே மாதம் மும்பையில் உள்ள டோபிவாலா தேசிய மருத்துவக்கல்லூரியில் மகப்பேறு மருத்துவப்பிரிவில் முதுகலைப்பட்டப்படிப்பில் சேர்ந்து படித்து வந்தார். பிஒய்எல் நாயர் மருத்துவமனையுடன் இணைந்து இக்கல்லூரி செயல்பட்டு வந்தது.
பாயலுக்கு படிப்பது சிரமமாக இல்லை. ஆனால் அங்கிருந்த சில மாணவிகள் பாயலின் ஜாதிப்பெயரைக்குறிப்பிட்டு கிண்டல் செய்தனர். ஹேமா ஆஜா, மேகர், அங்கீதா என்ற மூன்று மாணவிகளும் பாயலை கிண்டல் செய்து தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

வாட்ஸ்அப்பில் கிண்டல்
பாயல் தத்வியைப் பற்றி வாட்ஸ்அப் குழுவில் கிண்டலான பதிவுகளை போடுவதோடு ஜாதியையும் குறிப்பிட்டு கிண்டல் செய்வார்களாம். இட ஒதுக்கீட்டில் படிக்க வந்தவள்தானே என்றும் பேசி மனதை காயப்படுத்தியுள்ளனர். பாயல் தத்வி டாக்டருக்கு படித்து முடித்து விட்டு எத்தனை மகிழ்ச்சியோடு உயர்படிப்புக்கு சேர்ந்தாளோ அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை.

புகார் ஏற்க மறுப்பு
மகப்பேறு மருத்துவ பிரிவில் பயிற்சியின் போது உள்ளே செல்லவும் அனுமதிக்காமல் வார்த்தைகளினால் குத்தி கிழித்துள்ளனர். பெற்றோரிடம் கூறி அழுதாள் பாயல், இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் பெற்றோர் புகார் அளித்தும் பயனில்லை. அவர்கள் விசாரணை நடத்தியதாக தெரியவில்லை.

தூக்குப் போட்டுக்கொண்ட பாயல்
சமுதாயத்தின் கீழ் நிலையில் இருந்து முதன்முறையாக டாக்டர் பட்டம் பெற்றும் பயணில்லாமல் போய்விட்டது. மனதளவில் காயம்பட்ட அந்த இளம் பெண் தனது அறையில் கடந்த 22ஆம் தேதி தூக்குப்போட்டுக்கொண்டு செத்துப்போனார். நாடு முழுவதும் தேர்தல் முடிவுகள் பிஸியாக இருந்ததால் இந்த சம்பவம் இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பெற்றோர் குற்றச்சாட்டு
மகளின் மரணம் பெற்றோர்களை கடுமையாக பாதித்துள்ளது. நாங்கள் புகார் கொடுத்தபோதே விசாரணை நடத்தியிருந்தால் எங்களின் மகள் உயிருடனாவது இருந்திருப்பாள். எங்கள் சமூகத்தின் முதல் டாக்டர் அவள்தான். எங்கள் குடும்பத்தின் முதல் மருத்துவர் என்று கண்ணீருடன் கூறினார்.

தைரியசாலி
எங்களின் மகள் அதி புத்திசாலி, மிகவும் தைரியசாலி, கடின உழைப்பினால் இந்த இடத்திற்கு முன்னேறியவள். அவளது உயிரை மூன்று பேர் குடித்து விட்டனர். குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கவேண்டும் என்று குமுறலுடன் கூறியுள்ளனர். பாயலின் மரணத்திற்கு காரணமானவர்களாக குற்றம் சாட்டப்படும் மாணவிகள் ஹேமா ஆஜா, மேகர், அங்கீதா ஆகியோர் தற்போது தலைமறைவாகி விட்டனர்.

#JusticeForDrPayal
பாயலின் மரணம் குறித்து சமூகவலைத்தளங்களில் பேசி வருகின்றனர். பின்தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் கூறி பதிவிட்டு வருகின்றனர். பாயல்சாத்விக்காக #JusticeForDrPayal என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி பலரும் தங்களின் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர். உயர்படிப்பிற்காக டெல்லி சென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களும் இதுபோல் உயிரிழந்துள்ளனர். அவர்களின் மரணத்திலும் பல மர்மங்கள் நிறைந்துள்ளன. குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை கிடைத்தால் மட்டுமே பின்தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களின் உயிருக்கும், கல்விக்கும் உத்தரவாதம் தரமுடியும்.












Click it and Unblock the Notifications