பிரியாணி+ தர்பூசணி காரணமில்லை.. மும்பை மர்ம மரணங்களில் புதிய திருப்பம்! மோசமான கிட்னி பாதிப்பு ஏன்?
மும்பை: மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியையே உலுக்கியுள்ளது. முதலில் பிரியாணி, அதன் பிறகு தர்பூசணியை அந்த குடும்பத்தினர் சாப்பிட்ட நிலையில், சில மணி நேரங்களிலேயே இந்தத் துயரம் நேர்ந்துள்ளது. மருத்துவ உலகமும் போலீசாரும் இந்த மர்மத்தை உடைக்கப் போராடி வருகின்றன.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள நெரிசலான பகுதி பிண்டி பஜார். அந்தேரியில் மொபைல் உதிரி பாகங்கள் கடை நடத்தி வந்த அப்துல்லா டொடாக்கியா (44), தன் மனைவி நஸ்ரின் (35) மற்றும் மகள்கள் ஆயிஷா (16), ஜைனப் (12) ஆகியோருடன் சனிக்கிழமை வழக்கம் போல இரவு உணவு சாப்பிட்டுள்ளார்.

பிரியாணி- தர்பூசணி
உறவினர்களுடன் சேர்ந்து அவர் பிரியாணி - புலாவ் விருந்து சாப்பிட்டுள்ளார். இரவு 10:30 மணிக்கு நடந்த அந்த விருந்தில் மற்ற உறவினர்களும் சாப்பிட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. விருந்துக்குப் பிறகு, இரவு 1 மணியளவில் இந்தக் குடும்பத்தினர் மட்டும் தனியாகத் தர்பூசணி பழத்தைச் சாப்பிட்டுள்ளனர். இதுதான் அவர்கள் மற்றவர்களுடன் பகிராமல் சாப்பிட்ட ஒரே உணவு.
இந்தச் சூழலில் அதிகாலை 5 மணி அளவில் நான்கு பேருக்கும் கடுமையான வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் உடல் அசதி ஏற்பட்டுள்ளது. முதலில் அருகே உள்ள மருத்துவர் வந்து சிகிச்சை கொடுத்துள்ளார். இருப்பினும், எந்தவொரு பலனும் இல்லை. நிலைமை மோசமானதைக் கண்டு அக்கம் பக்கத்தினர் அவர்களைச் சபூ சித்திக் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு 12 வயது சிறுமி ஜைனப் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அடுத்தடுத்து உயிரிழப்பு
மற்ற மூவரும் ஜே.ஜே மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லை. முதலில் தாய் நஸ்ரின் மதியம் உயிரிழந்தார். மாலை மூத்த மகள் ஆயிஷா உயிரிழந்தார். இரவு 10:30 மணியளவில் தந்தை அப்துல்லாவும் உயிரிழந்தார். ஒரே நாளில் ஒரு குடும்பமே மொத்தமாக அழிந்துபோனது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்பூசணி காரணம் இல்லை
பாதிக்கப்பட்டவர்களின் உடலில் கடுமையான புட் பாய்சனிங் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஜே.ஜே மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், "தர்பூசணி பழம் பழையதாக இருந்தாலோ அல்லது கெட்டுப் போயிருந்தாலோ கூட, அது இவ்வளவு விரைவாக நான்கு உயிர்களைப் பறிக்க வாய்ப்பில்லை" என்கிறார்கள் நிபுணர்கள்.
பழத்தில் ஏதாவது நச்சுத் தன்மையுள்ள கெமிக்கல் சேர்க்கப்பட்டிருக்கலாம் அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கே.இ.எம் (KEM) மருத்துவமனை நிபுணர்களும் தர்பூசணி மட்டும் பொதுவாக இவ்வளவு கொடிய விளைவை ஏற்படுத்தாது என்றே கருதுகின்றனர். அதாவது பிரியாணி + தர்பூசணி சாப்பிட்டது பிரச்சனை இல்லை.. அந்த தர்பூசனியில் வேறு ஏதோ கெமமிக்கல் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்பதே சந்தேகமாக இருக்கிறது.
போலீஸ் விசாரணை
ஜே.ஜே மார்க் போலீசாரும் விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர். தர்பூசணி பழத்தின் மாதிரிகள், இறந்தவர்களின் உடற்கூறுகள் மற்றும் வயிற்றில் இருந்த உணவு மாதிரிகள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் இன்று அல்லது நாளை கிடைக்கும் எனத் தெரிகிறது. இதற்கிடையே, தர்பூசணி சாப்பிடுவதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இறந்தவர்களின் உடல் மும்பை மரைன் லைன்ஸ் பகுதியில் உள்ள மயானத்தில் திங்கட்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
தர்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் கோடைக் காலத்தில் அமுதம் போன்றவை. அதிலும் தினசரி வெளியே செல்வோர் கட்டாயம் சாப்பிடும் ஒரு பழமாக தர்பூசணி இருக்கிறது. எனவே, இந்த மர்மத்திற்கான பதிலை போலீசார் சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. அப்போது தான் பொதுமக்களும் அச்சமின்றி தர்பூசணியை சாப்பிட முடியும்!












Click it and Unblock the Notifications