காதலிக்கு அபார்ஷன்.. மற்றொரு காதலியை ஏமாற்றி ரூ. 6.5 லட்சம் பணம் பறித்த மும்பை இளைஞர் கைது!
திருமணம் செய்து கொள்வதாக இரண்டு பெண்களை ஏமாற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை: ஒரு காதலியை ஏமாற்றி ரூ. 6.5 லட்சம் பணம் பெற்று மற்றொரு காதலிக்கு அபார்ஷன் செய்த இளைஞரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே காண்டிவலி பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் பாண்டே. 23 வயதான அஸ்வின் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். ஏற்கனவே திருமணமான இவர் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது முன்னாள் தோழியை விருந்து நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துள்ளார் அஸ்வின். தற்போது அவர் பெரிய நிறுவனம் ஒன்றில் கை நிறைய சம்பளத்துடன் பணி புரிந்து வருவது பற்றி தெரிந்து கொண்ட அஸ்வின், அவரைக் காதலிப்பது போல் நடித்துள்ளார்.

ஏமாற்றி பணம் பறிப்பு:
அஸ்வினை நம்பிய அப்பெண்ணும் அவர் கேட்ட போதெல்லாம் பணம் கொடுத்துள்ளார். உறவினர் ஒருவருக்கு மருத்துவச் செலவிற்குப் பணம் தேவைப்படுவதாகக் கூறி, கொஞ்சம் கொஞ்சமாக அப்பெண்ணிடம் இருந்து சுமார் ரூ. 6.5 லட்சம் பணம் வரை ஏமாற்றிப் பெற்றுள்ளார் அஸ்வின்.

அதிர்ச்சி:
இந்த சூழ்நிலையில் சமீபத்தில் அஸ்வினின் மொபைல் போனில், ‘ஐ லவ் யூ' என ஒரு எண்ணில் இருந்து மெசேஜ் வந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் அப்பெண். இது குறித்து அஸ்வினிடம் அவர் கேட்டுள்ளார். ஆனால், சரிவர பதில் அளிக்காமல் அஸ்வின் சமாளிக்கவே, அவருக்கு சந்தேகம் அதிகரித்துள்ளது.

அபார்ஷன்:
இதனால் அஸ்வின் இல்லாத நேரத்தில் அந்த எண்ணிற்கு போன் செய்துள்ளார் அவர். அப்போது எதிர்முனையில் பெண் ஒருவர் பேசவே அதிர்ச்சி அடைந்த அவர், மேற்கொண்டு இது குறித்து அப்பெண்ணிடம் விசாரித்துள்ளார். அதில், அப்பெண் டெல்லியைச் சேர்ந்தவர் என்பதும், அஸ்வின் அவரைக் காதலித்து கர்ப்பமாக்கியதும் தெரிய வந்தது. மேலும், அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உறவு கொண்டதையும், பின்னர் ரூ. 60 ஆயிரம் செலவு செய்து அபார்ஷன் செய்ய வைத்ததையும் அவர் தெரிந்து கொண்டார்.

ஏமாற்றுவேலை:
அதோடு அப்பெண் கூறிய காலகட்டத்தில் அஸ்வின் தன்னிடம் ஏமாற்றி பணம் பறித்ததையும் முதல் காதலி உணர்ந்தார். இதனைத் தொடர்ந்து அஸ்வின் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறியது ஏமாற்றுவேலை என்பதை அவர் உணர்ந்தார்.

போலீசில் புகார்:
உடனடியாக இது தொடர்பாக மும்பை போலீசில் அவர் புகார் அளித்தார். பெண்ணை ஏமாற்றி பணம் பறித்தது உட்பட பல்வேறு பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அஸ்வினைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விசாரணை:
அஸ்வினிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் இதுவரை காதலிப்பதாகக் கூறி இரண்டு பெண்களைத் தான் ஏமாற்றியுள்ளாரா இல்லை இன்னும் இந்தப் பட்டியல் நீளுமா என்பது விசாரணைக்குப் பிறகே தெரியவரும்.












Click it and Unblock the Notifications