'இந்தியாவிலேயே மிகப் பெரிய ஊழல்' நிர்மலா சீதாராமன் ராஜினாமா கோரி வெடிகுண்டு மிரட்டல்- 3 பேர் கைது!
மும்பை: இந்திய வரலாற்றிலேயே மிகப் பெரிய ஊழல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி இயக்குநர் சக்திகாந்த தாஸ் இருவரும் ராஜினாமா செய்யாவிட்டால் மும்பையில் 11 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்ததாக குஜராத்தை சேர்ந்த 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமையன்று ஒரு இ மெயில் வந்தது. கிலாபத் இந்தியா Khilafat India என்ற பெயரில் அனுப்பி வைக்கப்பட்ட அந்த இ மெயிலில், இந்திய வரலாற்றிலேயே மிகப் பெரிய ஊழலை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்துள்ளனர். இந்த இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். இருவரது ஊழல்களுக்கு முழுமையான ஆணித்தரமான ஆதாரங்கள் இருக்கின்றன.

நிர்மலா சீதாராமனும் சக்திகாந்த தாஸும் பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகம், ஹெச்டிஎப்சி அலுவலகம், ஐசிஐசிஐ வளாகம் உள்ளிட்ட 11 இடங்களில் பிற்பகல் 1.30 மணிக்கு குண்டுகள் வெடிக்கும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
குண்டு வெடிப்புகள், பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொண்ட மும்பைக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மிரட்டல் விடுக்கப்பட்ட 11 இடங்களிலும் போலீசார் துருவி துருவி சோதனை நடத்தினர் ஆனால் இந்த சோதனையில் வெடி பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.
இதனையடுத்து மின்னஞ்சலை அனுப்பியது யார் என மும்பை போலீசார் விசாரணை நடத்தினர் . இந்த விசாரணையில் குஜராத் மாநிலத்தில் இருந்த் இந்த மெயில் அனுப்பி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தற்போது வரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மும்பை போலீசார் தெரிவித்தனர். இந்த 3 பேரிடமும் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த 3 பேருக்கும் பயங்கரவாத இயக்கங்களுக்கும் தொடர்புள்ளதா? எனவும் மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications