அரைக்கை டீசர்ட் + ஷார்ட்ஸ்.. லாக்-அப்பில் கைதிகளுக்கான உடையை மாற்றிய போலீஸ்.. காரணம் இதுதான்
மும்பை: மும்பை போலீஸ் நிலையங்களில் உள்ள லாக்அப்களில் அடைக்கப்படும் கைதிகளுக்கு மெரூன் நிற டீசர்ட் மற்றும் கருப்பு நிற ஷார்ட்ஸ் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உடை மாற்றத்தின் பின்னணி குறித்து இங்க பார்க்கலாம்.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் சிறையில் விசாரணை கைதிகளாகவும், தண்டனை கைதிகளாகவும் ஏராளமானவர்கள் உள்ளனர்கள். இவர்களுக்கு சிறையில் வெள்ளை நிற பருத்தி சட்டை, ஷார்ட்ஸ், பேண்ட் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் போலீஸ் நிலையத்தின் லாக்-அப்களில் அடைக்கப்படும் கைதிகளை எடுத்து கொண்டால் அவர்களுக்கு என்று தனியாக உடை என்பது கிடையாது.
போலீசார் கைது செய்யப்படும்போது எந்த வகையான உடை அணிந்துள்ளார்களோ? அந்த உடையில் தான் லாக்அப்களில் அடைக்கப்படுவார்கள். அதன்பிறகு வேறு உடைகளை அவர்களால் அணிந்து கொள்ள முடியும்.
மெரூன் டீசர்ட் - கருப்பு ஷார்ட்ஸ்
இப்படியான சமயங்களில் சிலர் தாங்கள் அணிந்திருக்கும் லுங்கி, வேஷ்டி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி லாக்அப்களில் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து விடுகின்றன. இதனை தடுக்கும் வகையில் மும்பை போலீசார் புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி மும்பை போலீசாரால் கைது செய்யப்படும் நபர்கள் லாக்அப்களில் அடைக்கப்படும்போது அவர்களுக்கு மெரூன் நிற அரைக்கை டீசர்ட் மற்றும் கருப்பு நிற ஷார்ட்ஸ் வழங்கப்படுகிறது.
உடை மாற்றத்தின் பின்னணி
அதன்படி இந்த புதிய உடை மாற்றம் அண்டோப் ஹில் காவல் நிலையத்தில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருட்டு வழக்கில் கைதானவர்கள் , மெரூன் நிற அரைக்கை டீ-ஷர்ட்கள் மற்றும் கருப்பு ஷார்ட்ஸ் அணிந்து இருந்தனர். ஷார்ட்ஸ் மற்றும் டீசர்ட் நீளமாக இருக்காது. இதனால் அதனை பயன்படுத்தி கைதகளால் தூக்கிட்டு கொள்ள முடியாது என போலீசார் நம்புகின்றனர். அதுமட்டுமின்றி இது போலீஸ் நிலையத்தில் ஏற்படும் மரணங்களைக் குறைக்கவும், கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உதவும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
சல்மான் கான் வழக்கால் மாற்றம்
ஆடைகள் மட்டுமின்றி லாக்அப்பிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மும்பை போலீசாரின் இந்த நடவடிக்கைகளின் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை மகாராஷ்டிராவில் போலீஸ் நிலையங்களில் 54க்கும் மேற்பட்ட லாக்அப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் பல வழக்குகள் கைதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவையாகும்.
குறிப்பாக நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே நடந்த துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனுஜ் தாபன் குற்றப்பிரிவு போலீஸ் பிரிவின் லாக்அப்பில் படுக்கை விரிப்பை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் லாக்அப்களில் அடைக்கப்படும் நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய நெறிமுறைகளை உருவாக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டு தற்போது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications