அமேசானுக்கு ஒரு நியாயம்.. ஆரேவுக்கு ஒரு நியாயமா.. மும்பை போலீஸை கேள்விக்கணைகளால் தொடுத்த மக்கள்!
மும்பை: அமேசான் காட்டுத் தீ குறித்து வாய்த் திறந்த மும்பை போலீஸ் ஆரே காட்டு பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு மட்டும் மௌனம் சாதிப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் கடந்த மாதம் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. இதை அணைக்க முடியாமல் பிரேசில் அரசு மிகவும் சிரமத்தில் இருந்தது.
அமேசான் காட்டுத் தீயால் பல வகை அரிய வகை மரங்களும் அரிய பறவைகள், விலங்குகள், உயிரினங்கள் அழியும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை அடைந்தனர்.

மும்பை போலீஸ் வேதனை
அப்போது உலக நாடுகள் அனைத்தும் அமேசான் காடுகளின் மகத்துவம் தெரிந்து வேதனை அடைந்தனர். இதில் மும்பை போலீஸும் கவலை அடைந்தது. இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்தது.

கேள்வி
அமேசான் மழை காடுகளில் ஏற்பட்ட தீவிபத்தால் மனித இனத்துக்கே நஷ்டம் என்றும் அமேசான் காடுகளை காக்க ஒன்றிணைவோம். நாம் செய்யாவிட்டால் யார் செய்வது, இப்போது இல்லாவிட்டால் எப்போது என கேள்வி எழுப்பியிருந்தது.

மெட்ரோ
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உயர்ந்து கொண்டே வரும் மக்கள்தொகையை கருத்தில் கொண்டு சாலை மார்க்க பயணங்களை தவிர்க்கும் வகையில் மெட்ரோ ரயில் வழித் தடங்களுக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

மும்பை மாநகராட்சி
இதன்படி மும்பை ஆரே காலனி பகுதியில் மெட்ரோ ரயில் நிலையத்திற்கான வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஆரே காலனியில் உள்ள வனப்பகுதியில் 2, 700 மரங்களை வெட்ட கிரேட்டர் மும்பை மாநகராட்சி அனுமதி அளித்தது.

மும்பை ஹைகோர்ட்
இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து மும்பை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. பல மாதங்கள் நடந்து வந்த இந்த வழக்கை மும்பை ஹைகோர்ட் நேற்று முன் தினம் தள்ளுபடி செய்தது.

போராட்டம்
இதையடுத்து மரங்களை வெட்டும் பணி நேற்று நள்ளிரவே தொடங்கியது. இதனால் மரம் வெட்டும் இயந்திரங்கள், புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டன. இதையடுத்து அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் ஆத்திரம் அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
|
மௌனம் சாதிப்பது ஏன்
எனினும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை அன்றே 1500-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டன. 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து 144 தடையுத்தரவு போடப்பட்டது. இந்த நிலையில் அமேசான் காடுகளை காப்போம் என கூறிய மும்பை போலீஸ் ஆரே காடுகளுக்கு மட்டும் மௌனம் சாதிப்பது ஏன் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications