சிவசேனா சஞ்சய் ராவத் ஜாமீனில் விடுதலை!அமலாக்கத்துறை ஆட்டத்துக்கு மும்பை ஸ்பெஷல் கோர்ட் நீதிபதி டோஸ்!
மும்பை: சிவசேனா மூத்த தலைவரான சஞ்சய் ராவத் எம்.பி.யை முகாந்திரமே இல்லாமல் பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்ததற்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் சஞ்சய் ராவத்தை பிணையில் விடுதலை செய்யவும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி தேஷ்பாண்டே உத்தரவிட்டார்.
சிவசேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவர் ராஜ்யசபா எம்.பி.யான சஞ்சய் ராவத். பாஜகவை மிக கடுமையாக விமர்சித்து வந்தவ சஞ்சய் ராவத்.

சிறையில் அடைப்பு
மும்பை கோரேகாவ் பத்ரா சால் குடியிருப்பு சீரமைப்பில் மோசடி நடந்தது என்பது சஞ்சய் ராவத் உதவியாளர் மீதான வழக்கு. இந்த மோசடியில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது என்பது அமலாக்கத்துறை வழக்கு. இவ்வழக்கில் கடந்த ஜூலை மாதம் சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டார். பின்னர் மும்பை ஆர்தர் சாலை சிறையில் சஞ்சய் ராவத் அடைக்கப்பட்டார். கடந்த 100 நாட்களாக சிறைவாசம் அனுபவித்த சஞ்சய் ராவத், ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுக்கள் மீதான வாதங்கள் கடந்த நவம்பர் 2-ந் தேதியுடன் நிறைவடைந்தது.

ஜாமீனில் விடுதலை- அமலாக்கத்துறைக்கு கண்டனம்
இதனைத் தொடர்ந்து இன்று மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி தேஷ்பாண்டே, சஞ்சய் ராவத்தை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார். அத்துடன் அமலாக்கத்துறைக்கு கடும் கண்டனமும் தெரிவித்தார் நீதிபதி. சஞ்சய் ராவத் உதவியாளர் மீது தொடரப்பட்டிருப்பது சிவில் வழக்கு; இதில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் என்பதற்கு முகாந்திரமே இல்லை. ஆனாலும் சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது என கண்டனம் தெரிவித்தார் நீதிபதி தேஷ்பாண்டே.

ஹைகோர்ட்டில் அப்பீல்
ஆனாலும் அமலாக்கத்துறை சஞ்சய் ராவத் விடுதலையை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவுக்கு தடை கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.

மருத்துவமனை செல்கிறார் ராவத்
சஞ்சய் ராவத்தின் விடுதலை தொடர்பாக அவரது சகோதரர் சுனில் ராவத் கூறுகையில், ஜாமீனில் சிறையில் இருந்து சஞ்சய் ராவத் விடுதலை செய்யப்பட்டாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார். அவரது உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை முன்னதாக சஞ்சய் ராவத் சந்தித்தார். அதன்பின்னர் சில இடங்களுக்கு சென்றுவிட்டு மருத்துவமனை செல்ல திட்டமிட்டுள்ளார் சஞ்சய் ராவத் என்றார்.












Click it and Unblock the Notifications