கடும் தட்டுப்பாடு.. மும்பையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி திடீரென நிறுத்தம்.. மக்கள் கவலை
மும்பை: மும்பையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதால் தடுப்பூசி போடும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் நிறுத்தி உள்ளனர்.
மும்பையில் கொரோனா நோய் தொற்றால் அதிக அளவு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக மும்பையில் கொரோனா தடுப்பூசியையும் 45 வயதுக்கு மேற்பட்ட மக்கள் ஆர்வமாக போட்டு வருகிறார்கள். ஆரம்பத்தில் மக்கள் இடையே சற்று தயக்கம் இருந்தாலும், பாதிப்பு அதிகரிப்பதால் மிகவும் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட தொடங்கினர்.

தடுப்பூசி போடும் மையங்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பி.கே.சி. உள்ளிட்ட பல இடங்களில் பொது மக்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து தடுப்பூசி போட்டனர். நேற்று பல மையங்களில் தடுப்பூசி போட முடியாமல் தவித்து போனார்கள்.
புதன்கிழமை இரவு மும்பைக்கு 75 ஆயிரம் தடுப்பூசி கிடைக்கும் என கூறப்பட்டது. இதுபோல குறைந்தளவு மருந்து இருக்கும் போது, மாநகராட்சி சில மையங்களை மட்டுமே திறந்து இருந்தது. மற்றவை மூடப்பட்டு இருந்தன. போதிய இருப்பு இல்லாத போதும் 50 ஆயிரம் தடுப்பூசியை பயன்படுத்தி உள்ளோம். ஒருவேளை கூடுதல் தடுப்பு மருந்து கிடைக்கவில்லை என்றால், தடுப்பூசி போடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்போம். போதிய சப்ளை கிடைக்கவில்லையெனில் தடுப்பூசி பணி அடுத்த 2 நாட்களுக்கு நிறுத்தப்படும். போதியளவு மருந்து இருப்பு வந்தவுடன் தடுப்பூசி வேகமாக போடப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.
இந்தநிலையில் நேற்று இரவு 11 மணியளவில் மும்பை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டது. அதில், மும்பையில் கொரோனா தடுப்பு மருந்து இருப்பில் இல்லை. எனவே இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்படுகிறது, என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிராவில் மருந்து தட்டுப்பாடு காரணமாக நாளை (மே 1-ந் தேதி) முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி வைக்கப்படாது என்று ஏற்கனவே மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications