"ஐ" விக்ரமை போல கொட்டிய முடி! 3 நாட்களில் 150+ பேருக்கு வழுக்கை தலை.. பெண்கள், குழந்தைகளை கூட விடல
மும்பை: இப்போதெல்லாம் முடி கொட்டுவது என்பதே பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதற்காகப் பல ஆயிரம் செலவில் சிகிச்சை பெறுவோரைக் கூட நாம் பார்த்திருப்போம். இதற்கிடையே மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வெறும் மூன்றே நாட்களில் திடீரென 150 பேருக்கு முடி கொட்டி வழுக்கைத் தலை ஏற்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கும் கூட இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் அங்குப் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்தக் காலத்தில் திடீர் திடீரென புது புது வைரஸ்கள் பரவி வருகிறது. சமீபத்தில் கூட ஹெச்எம்பிவி வைரஸ் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியிருந்தது. இந்தியாவிலும் அதன் கேஸ் அதிகரித்தே வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க மகாராஷ்டிரா மாநிலத்தில் புல்தானா என்ற மாவட்டத்தில் திடீரென மர்ம பாதிப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 3 நாட்களில் 150க்கும் மேற்பட்டோர் முடியை இழந்து மொத்தமாக வழுக்கைத் தலையாக மாறியுள்ளனர்.
வழுக்கைத் தலை:
வடக்கு மகாராஷ்டிராவில் உள்ள புல்தானா மாவட்டத்தின் அமைந்துள்ள ஷேகான் என்ற ஊரைச் சுற்றியுள்ள 15 கிராமங்களில் வினோதமான ஒரு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் முடி மொத்தமாகக் கொட்டி வழுக்கைத் தலையாக மாறிவிடுவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
முதலில் இந்த பாதிப்பு ஏற்படுவோருக்கு உச்சந்தலையில் கடுமையான அரிப்பு ஏற்படத் தொடங்குகிறது. சாதாரண அரிப்பு தான் எனச் சொரியத் தொடங்குவோருக்கு அப்படியே முடி மொத்தமாக உதிர ஆரம்பித்துவிடுகிறது. இப்படியே ஒரு சில நாட்களில் தலையில் இருக்கும் மொத்த முடியும் கொட்டிவிடுகிறதாம். இதுவரை, ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 150க்கும் மேற்பட்டோருக்கு முடியை மொத்தமாகக் கொட்டி வழுக்கைத் தலை ஏற்பட்டுள்ளது.
400 பேர்:
இது மட்டுமின்றி சுமார் 400 பேருக்கு இந்த மர்ம பாதிப்பிற்கான அறிகுறிகள் பதிவாகியுள்ளன. அங்குள்ள ஹிங்னா, பாண்ட்கான், போட்டா மற்றும் பஹூர் பூர்ணா உள்ளிட்ட 15 கிராமங்களில் இது பரவியுள்ளது. இங்கு நீரில் கெமிக்கல் கலந்து இருக்கலாம் என்றும் இதனால் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
அதேநேரம் இக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் வைரஸ் பாதிப்பு காரணமாகவே இந்த நோய் ஏற்படுவதாக அஞ்சுகிறார்கள். இதை வழுக்கை வைரஸ் என்றும் இந்த கிராம மக்கள் குறிப்பிடுகிறார்கள். இருப்பினும், வைரஸ் பாதிப்பிற்கு எல்லாம் வாய்ப்புகள் குறைவு என்றே மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மருத்துவர்கள் அறிகுறிகள் அடிப்படையில் சிகிச்சையைத் தொடங்கியுள்ளனர். தோல் நோய் மருத்துவரும் சம்பவ இட்டத்திற்கு விரைந்துள்ளார்.
மருத்துவர்கள் சொல்வது என்ன:
இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள மருத்துவ அதிகாரி டாக்டர் அனில் பேங்கர் கூறுகையில், "அசுத்தமான நீர், ஊட்டச்சத்துக் குறைபாடுகள், பூஞ்சை தொற்று காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம். இது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு மருத்துவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என்றார்
'அலோபீசியா' எனப்படும் இந்த கடுமையான முடி உதிர்தல் பிரச்சினை அங்குள்ள அசுத்தமான நீர் அல்லது பூஞ்சை தொற்று காரணமாகவே ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது.
நிலத்தடி நீர் காரணமா:
இதில் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான பாதிக்கப்பட்ட கிராமங்கள் பூர்ணா நதிப் படுகை அமைந்துள்ளன. இந்த பகுதி அதன் உப்பு நிறைந்த மண்ணுக்கும் மோசமான நீரின் தரத்திற்கும் பெயர் பெற்றது. சமீபத்தில் இங்கு எடுக்கப்பட்ட நிலத்தடி நீர் மாதிரியில் கூட அதிகப்படியான ஃவுளூரைடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, இதன் காரணமாகக் கூட முடி கொட்டும் பிரச்சினை ஏற்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும், உறுதியாக என்ன காரணம் என்பதைக் கண்டறியும் முயற்சியில் மருத்துவர்கள் இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications