லாஜிஸ்டிக்கின் ஹப்.. வேற லெவலில் மாறப்போகும் நவி மும்பை சர்வதேச விமான நிலையம்
மும்பை: உலகை இணைக்கும் மிகப்பெரிய லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான ஃபெடெக்ஸ், நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தில் (NMIA) ரூ. 2,500 கோடிக்கும் மேல் முதலீடு செய்து, முழுவதும் தானியங்கி முறையில் செயல்படும் ஒரு விமான சரக்கு மையத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளது. இந்த விமானசரக்கு மையம், இந்தியாவின் லாஜிஸ்டிக்ஸ் கட்டமைப்பை மேலும் பலப்படுத்தி, சர்வதேச வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

300,000 சதுர அடி பரப்பளவில் அமையவிருக்கும் இந்த மையம், அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள உள்ளது. இது இந்தியாவுக்கு தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடன் வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்தும் ஒரு முக்கிய பிராந்திய ஒருங்கிணைப்பு மையமாக செயல்படும்.
இந்த விமான சரக்கு மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஃபெடெக்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ராஜ் சுப்ரமணியம், ஃபெடெக்ஸ் ஏர்லைன் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ரிச்சர்ட் ஸ்மித், ஃபெடெக்ஸ் MEISA தலைவர் காமி விஸ்வநாதன் மற்றும் அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஜீத் அதானி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த மையம் செயல்பாட்டுக்கு வரும்போது லாஜிஸ்டிக்ஸ், சேமிப்பு கிடங்கு மேலாண்மை, போக்குவரத்து போன்ற துறைகளில் 6,000க்கும் அதிகமான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும். இது வேலைவாய்ப்புகளை பெருக்குவதோடு மட்டுமல்லாமல், அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஒரு பெரிய ஊக்கமாக அமையும்.
இதுபற்றி அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஜீத் அதானி கூறுகையில், ‛‛இந்த திட்டம் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் நீண்டகால கனவாகும். ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு வசதிகள் மூலம், இந்தியாவின் உலகளாவிய வர்த்தகப் போட்டித்தன்மையை இந்த மையம் வலுப்படுத்தும் . மேலும், நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் அமைவிடம், அதிக வளர்ச்சி கொண்ட ஏற்றுமதி துறைகளுக்குப் பெரிய ஆதரவாக இருக்கும் . அதுமட்டுமின்றி மகாராஷ்டிராவை உலகளாவிய லாஜிஸ்டிக்ஸ் நுழைவாயிலாக மாற்றும்’’ என்றார்.
இதுபற்றி ஃபெடெக்ஸ் MEISA தலைவர் காமி விஸ்வநாதன் கூறுகையில், ‛‛இந்தியா உலக அளவில் போட்டித்தன்மையுடன் திகழ, நம்பகமான மற்றும் திறமையான லாஜிஸ்டிக்ஸ் கட்டமைப்பு மிகவும் அவசியம். இந்த மையத்தின் வழியாக, ஃபெடெக்ஸ் தனது உலகளாவிய நெட்வொர்க்கை இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் வர்த்தகச் சந்தையுடன் இணைக்க உதவும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கான வேகம், நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை மேலும் மேம்படுத்தும் ’’ என்றார்.
இந்த சரக்கு மையம் நவீன வசதிகளை கொண்டிருக்கும். அதன்படி தானியங்கி முறை செயல்படுத்தப்படும். ஸ்கேனிங், அதிவேகப் பரிசோதனைக்கா தொழில்நுட்பம், விமானங்களுக்கான பிரத்யேக நிறுத்துமிடங்களை கொண்டிருக்கும். இந்த வசதிகள், உள்ளே வரும் மற்றும் வெளியே செல்லும் சரக்குகளை ஒரே நேரத்தில் திறம்படக் கையாள உதவும்.
இதன் மூலம், சரக்குப் போக்குவரத்து நேரம் குறையும். குறிப்பாக, எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், மருந்துகள், பொறியியல் சாதனங்கள் மற்றும் விரைவில் கெட்டுப்போகும் உணவுப் பொருட்கள் போன்ற அதிக மதிப்புள்ள மற்றும் அவசரமான துறைகளுக்கு இது மிகப்பெரிய அளவில் நன்மை பயக்கும்.
இது குறு, சிறு, மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSMEs) ஏற்றுமதி மற்றும் இறக்குமதி திறன்களை மேம்படுத்துவதோடு, லாஜிஸ்டிக்ஸ் செலவுகளைக் குறைத்து, சரக்குகள் சென்றடையும் நேரத்தையும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நவிமும்பை விமான நிலையத்தின் சரக்கு போக்குவரத்து கட்டமைப்பு முதலில் ஆண்டுக்கு சுமார் 0.5 மில்லியன் மெட்ரிக் டன்களைக் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும். முழுமையாகச் செயல்படும்போது ஆண்டுக்கு சுமார் 3.25 மில்லியன் மெட்ரிக் டன்கள் சரக்குகளைக் கையாளும் மேம்படுத்தப்படும். இது மும்பை பெருநகரப் பகுதியை ஒரு முக்கிய விமான சரக்கு மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மையமாக நிலைநிறுத்தும்.
அதோடு ஏறக்குறைய 30 ஆண்டுகளாக இந்தியாவில் செயல்பட்டு வரும் ஃபெடெக்ஸ் நிறுவனத்தின் சேவையை இது வலுப்படுத்தும். அதோடு உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஒருங்கிணைந்த விமானப் போக்குவரத்துக்கான பல்துறை வர்த்தக தளமாக நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை இந்த திட்டம் மாற்றும் என்கின்றனர் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications