பழம்பெரும் நடிகர் திலீப் குமார் காலமானார்... நாடு போற்றிய நல்ல கலைஞரை இழந்த பாலிவுட் திரையுலகம்..!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமார் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 98.
பாலிவுட் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் திலீப் குமார். 1944-ம் ஆண்டு நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய அவர் 1998-ம் ஆண்டு வரை நடித்தார்.
1994-ம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருதை பெற்ற திலீப் குமார், ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன், என அனைத்து உயர்ந்த விருதுகளையும் பெற்றிருக்கிறார். இதேபோல் சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதுகளையும் இவர் பெற்றிருக்கிறார்.

இதனிடையே வயது மூப்பு காரணமாக அவ்வப்போது உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார் திலீப் குமார். கடந்த மாதம் அவருக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
பிரபல பாலிவுட் நடிகர் திலீப்குமார் காலமானார்.. திரை பிரபலங்கள்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த போதும், வயது மூப்பின் காரணமாக மருத்துவத்தை அவரது உடல்நிலை ஏற்கும் நிலையில் இல்லை. இருப்பினும் தொடர் சிகிச்சை தரப்பட்டு வந்தது.
இந்தச் சூழலில் இன்று அதிகாலை திலீப் குமாரின் உயிர் மும்பை இந்துஜா மருத்துவமனையில் பிரிந்தது. இதையடுத்து திலீப் குமாரின் நினைவை போற்றும் வகையில் அவர் நடித்த திரைப்படக் காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதேபோல் திலீப்குமாரை இழந்து வருந்தும் அவரது மனைவி சாய்ரா பானு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இந்திய திரையுலக நட்சத்திரங்கள் ஆறுதலும், இரங்கலும் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications