"அது தான் ஒரே தீர்வு!" கலங்கி நிற்கும் தாக்கரே! டக்கென உள்ளே வந்து ஐடியா கொடுத்த சரத் பவார்
மும்பை: மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே அசாமில் முகாமிட்டுள்ள நிலையில், அங்கு அரசியல் குழப்பம் தொடர்ந்து வருகிறது.
மகாராஷ்டிராவில் மகா விகாஸ் கூட்டணி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
சிவசேனா மூத்த தலைவரும் மகாராஷ்டிரா பொதுப் பணித்துறை அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தியாளர்களே இந்த குழப்பத்திற்குக் காரணம்.

அசாம்
அவருக்கு முதலில் சுமார் 10 முதல் 16 எம்எலஏக்களின் ஆதரவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஷிண்டே தனக்கு 40-46 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். முதலில் தனது ஆதரவாளர்கள் உடன் அவர் சூரத்தில் தங்கி இருந்த நிலையில், அதைத் தொடர்ந்து அவர்கள் இப்போது அசாம் மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் 3 ஆண்டுக் கால கூட்டணி அரசு கவிழும் ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

உத்தவ் தாக்கரே
முதலில் உத்தவ் தாக்கரேவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கவே இந்த நடவடிக்கைகள் என்று கூறப்பட்டன. இருப்பினும், திடீரென சிவசேனா மீது தனக்கு எவ்வித கோபமும் இல்லை என்று கூறிய ஏக்நாத் ஷிண்டே, என்சிபி மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் தான் தனக்குப் பிரச்சினை உள்ளதாகத் தெரிவித்தார். அவருடன் இருக்கும் எம்எல்ஏக்களும் இதே கருத்தை முன்மொழிந்துள்ளனர். பாஜக உடன் சிவசேனா கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே அவர்களின் வாதமாக உள்ளது.

சரத் பவார்
கடந்த வாரம் வரை நன்றாகச் சென்று கொண்டிருந்த மகாராஷ்டிர அரசியலில் திடீரென இப்படியொரு அரசியல் குழப்பம் ஏற்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இதையடுத்து கூட்டணியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர், நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தனது அதிருப்தியை வெளிப்படையாகக் காட்டிய சரத் பவார், இந்த விவகாரம் குறித்தும் உளவுத்துறை ஏன் முன்கூட்டியே எச்சரிக்கை கொடுக்கவில்லை என்றும் கேட்டார்.

தேவேந்திர ஃபட்னாவிஸ்
இந்தச் சூழலில் மகாராஷ்டிரா எதிர்க்கட்சி தலைவரும் முன்னால் முதல்வருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் தனது இல்லத்தில் பாஜக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் உடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே அவுரங்காபாத்தில் பல இடங்களில் ஃபட்னாவிசுக்கு ஆதரவாகச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'Fadnavis for CM'என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ஒரே தீர்வு
இதனிடையே இன்று தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் நிறுவனர் சரத் பவார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய சரத் பவார், :"இந்தச் சூழலில் முதல்வரை (உத்தவ் தாக்கரே) கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளோம். அது தான் தீர்வை தரும். வேறு எந்த நடவடிக்கை எடுத்தாலும் பிரச்சினை முடியாது எனக் கூறி உள்ளோம்! இந்த சூழ்நிலையில் அவருடன் என்சிபி துணை நிற்கும். நாம் ஆட்சியை இழந்தாலும் கூட, வரும் காலத்தில் பெரிய அரசியல் போராட்டத்தை நடத்தத் தயாராக இருங்கள்" என்று பவார் கூறினார்.

சரத் பவார்
இந்த விவகாரம் தொடங்கிய போது இதைப் பற்றி என்சிபி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. உத்தவ் தாக்கரே இந்த விவகாரத்தை எளிதாகச் சமாளிப்பார் என்றே கூறி வந்தது. ஆனால் அப்போதே கூட மகாராஷ்டிரா அரசு கவிழ்ந்தாலும் கூட பாஜகவுடன் செல்லும் என்ற கேள்விக்கே இடமில்லை என்று சரத் பவார் திட்டவட்டமாகக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications