மிரளும் எதிரிகள்.. ஐஎன்எஸ் நீலகிரி உள்பட 3 போர்க்கப்பல்களை அர்ப்பணித்த மோடி.. என்ன ஸ்பெஷல்?
மும்பை: நம் நாட்டின் கடற்படையை வலுப்படுத்தும் வகையில் புதிதாக 3 அதிநவீன போர்க்கப்பல்கள் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மும்பையில் இன்று நடந்த விழாவில் ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்சீர் போர்க்கப்பல்களை கடற்படையிடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார். இதன்மூலம் இந்தியா கடற்படை வலுவடைந்துள்ளதோடு, எதிரிகளுக்கு சிம்ம சொப்பணமாக விளங்கும்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு இன்று பிரதமர் மோடி சென்றார். அதன்பிறகு மும்பை கடற்படை தளத்துக்கு சென்று கடற்படை அதிகாரிகளை சந்தித்து பேசினார்.

அதன்பிறகு இந்திய கடற்படையில் புதிதாக தயாரிக்கப்பட்ட அதிநவீன வசதி கொண்ட 3 போர்க்கப்பல்கள் சேர்க்கப்பட்டது. இந்த போர்க்கப்பல்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அதன்படி புதிதாக உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்சீர் ஆகிய மூன்று போர் கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது இந்திய கடற்படையை வலுப்படுத்துவதோடு, கடல் வழியாக நம் நாட்டுக்கு வரும் மிரட்டல்களை சமாளிக்க உதவும். அதோடு இது எதிரி நாடுகளுக்கு சிம்ம சொப்பணமாக விளங்க உள்ளது.
இதில் ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பல் என்பது பி15பி எனும் வழிக்காட்டப்பட்ட ஏவுகணை அழிப்பான் திட்டத்தின் (Guided Missile Destroyer Project) ஒருபகுதியாக நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் 4வது மற்றும் இறுதி போர்க்கப்பல் இதுவாகும். இது உலகின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன வசதி கொண்ட கப்பல்களில் ஒன்றாக இருப்பது நம் நாட்டுக்கு பெருமையாகும். இந்த கப்பல் என்பது 75 சதவீதம் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டதாகும். இது மேம்பட்ட நெட்வொர்க், மையப்படுத்தப்பட்ட திறன்களுடன் அதிநவீன ஆயுதம் மற்றும் சென்சார் அமைப்புகளை ஒருங்கிணைத்து பணி செய்யும்.
அதேபோல் ஐஎன்எஸ் நீலகிரி என்பது பி17ஏ ஸ்டெல்த் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதல் கப்பல் இதுவாகும். இந்த கப்பல் நமது கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் வடிவமைக்கப்பட்டது. இது அடுத்த தலைமுறைக்கான உள்நாட்டு போர் கப்பல்களில் முக்கியமானதாக இருக்கும். ஸ்டெல்த், அட்வான்ஸ்ட் டெக்னாலஜி, செயல்பாட்டு திறன் உள்ளிட்டவற்றை நவீன முறையில் செயல்படும்.
இதற்கு அடுத்தப்படியாக நாம் பார்ப்பது ஐஎன்எஸ் வாக்சீர் போர்க்கப்பல். இது பி75 ஸ்கார்பீயன் திட்டத்தின் ஒருபகுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த திட்டத்தில் 6 கப்பல்கள் உருவாக்க திட்டமிடப்பட்டது. ஏற்கனவே 5 போர் கப்பல்கள் உருவாக்கப்பட்ட நிலையில் இது 6வது மற்றும் கடைசி கப்பலாகும். இது நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமானத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலை நம் நாட்டின் கடற்படை மற்றும் பிரான்ஸ் கடற்படை இணைந்து தயாரித்துள்ளது. இதன்மூலம் கடலுக்குள் அடியில் இருந்து தாக்குதலை நடத்த முடியும்.
இந்த விழாவில் பிரதமர் மோடி பேசும்பாது கூறியதாவது: இன்று முக்கியமான நாள். இந்தியாவின் கடல்சார் பாரம்பரியம், கடற்படையின் புகழ்பெற்ற வரலாறு மற்றும் 'ஆத்மநிர்பர் பாரத்' திட்டம் ஆகியவற்றுக்கு இன்று மிகப் பெரிய நாள். சத்ரபதி சிவாஜி இந்திய கடற்படைக்கு புதிய பலத்தையும், தொலைநோக்கு பார்வையையும் தந்தார். அவருக்கு சொந்தமான இந்த பூமியில்21ம் நூற்றாண்டில் கடற்படையை வலுப்படுத்தும் வகையில் புதிய அடியை நாம் எடுத்து வைக்கிறோம். ஒரு ஒரு அழிப்பான் (destroyer), ஒரு போர்க்கப்பல் (frigate) மற்றும் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் (Submarine) ஆகியவற்றை ஒன்றாக நாட்டுக்கு அர்ப்பணிப்பது இதுதான் முதல் முறை.
இந்தியப் பெருங்கடல் பகுதி முழுவதும் முதல் பதிலளிப்பாளராக இந்தியா உருவெடுத்துள்ளது. சமீபத்திய மாதங்களில், நமது கடற்படை நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளது மற்றும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள தேசிய மற்றும் சர்வதேச சரக்குகளைப் பாதுகாத்துள்ளது. இது உங்கள் முயற்சிகளால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் மீதான உலகத்தின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை மீதான நம்பிக்கை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இன்று, ஆசியான், ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியாவின் பொருளாதார ஒத்துழைப்பு வலுவடைந்து வருவது தெளிவாகத் தெரிகிறது.
இதன்மூலம் இந்தியா பெருங்கடல் பிராந்தியத்தில் முதல் பதிலடி கொடுக்கும் வகையில் கடற்படை வலுப்பெற்றுள்ளது. நம் நாட்டின் கடற்படை 100க்கும் அதிகமானவர்களின் உயிரை காப்பாற்றி உள்ளது. அதேபோல் பலகோடி ரூபாய் மதிப்பிலான தேசிய, சர்வதேச பொருட்களை காப்பற்றி உள்ளது. இதன்மூலம் நம் நாட்டின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. உறுதியாகவும், நிலையான தன்மையுடன் நம் நாட்டின் கடற்படை தொடர்ந்து முன்னேறி வருகிறது. இதற்கு இன்றைய தினமே சாட்சி.
ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி மற்றும் ஐஎன்எஸ் வாக்சீர் ஆகியவை இந்திய கடற்படைக்கு மட்டுமல்ல, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் வலிமைக்கும் ஒரு சான்றாகும். அதோடு வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய சூழ்நிலையில், இந்த பிராந்தியத்தின் முக்கியத்துவம் பொருளாதாரம் உள்ளிட்டவை அதிகமாக வளர்ந்து உள்ளது. இதற்கு இந்த போர்க்கப்பல்கள் நம் நாட்டுக்கு வலு சேர்க்கும்'' என்று பெருமையாக கூறினார்.












Click it and Unblock the Notifications