மகாராஷ்டிராவுக்கு அள்ளி அள்ளி கொடுத்த பிரதமர் மோடி.. ரூ.50,000 கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ரூ.56,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார். மும்பையில் சுரங்க மெட்ரோ சேவையையும் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில் மகாராஷ்டிரா சென்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், மகாராஷ்டிராவில் சுமார் 50,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

மும்பை மெட்ரோ சார்பில், கஃபே பரேடில் இருந்து ஆரே வரை மூன்று கட்டங்களாக மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதல் வழித்தடத்தில் ஆரே முதல் பிகேசி வரையிலான வழித்தடத்தில் பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், ரூ.14,120 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் - ஆரே ஜேவிஎல்ஆர் பிரிவு இடையே நகரின் முதல் சுரங்க மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மெட்ரோ ரயிலில் மோடி பயணம் செய்தார்.
இந்த புதிய மெட்ரோ ரயில் வழித்தடத்தில் வரும் திங்கட்கிழமை முதல் ரயில் சேவைகள் தொடங்க உள்ளது. காலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையிலும், நெரிசல் அதிகமுள்ள நேரங்களில் சுமார் ஆறு நிமிட இடைவெளியிலும், நெரிசல் இல்லாத நேரத்தில் 15 - 20 நிமிட இடைவெளியிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.30 மணி முதல் இரவு 10.30 வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் ரூபாய் 12,200 கோடி செலவில் தானே ஒருங்கிணைந்த ரிங் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்தின் மொத்த நீளம் 29 கி.மீ. 20 உயர்த்தப்பட்ட மற்றும் 2 சுரங்க நிலையங்கள் இதில் அமைந்துள்ளன. மேலும், சுமார் ரூபாய் 3,310 கோடி மதிப்பீட்டில் சேதா நகர் முதல் ஆனந்த் நகர் வரையிலான உயரமான கிழக்கு நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
ரூபாய் 2,550 கோடி மதிப்பிலான நவி மும்பை விமான நிலைய (NAINA) திட்டத்தின் முதல் கட்ட பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். மேலும், ரூபாய் 700 கோடி செலவில் கட்டப்படும் தானே மாநகராட்சி திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டினார்.
இதேபோன்று மகாராஷ்டிரா முழுவதும் மொத்தம் 19 மெகாவாட் திறன் கொண்ட மகாராஷ்டிராவின் வாஷிமில் ஐந்து சோலார் பூங்காக்களையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான பி.எம். கிசான் சம்மான் நிதியின் 18வது தவணையை அவர் சுமார் 9.4 கோடி விவசாயிகளுக்கு வழங்கினார்.
பஞ்சாரா சமூகத்தின் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் பஞ்சாரா விராசத் அருங்காட்சியகத்தைத் மோடி திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறைகளில் 23,300 கோடி ரூபாய் மதிப்பிலான பல முயற்சிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
முன்னதாக, மகாராஷ்டிராவில் ரூ.11,200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.












Click it and Unblock the Notifications