ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு வலி.. வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்த இளைஞர்
மும்பை: மும்பை புறநகர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த நிறை மாத கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. எந்த மருத்துவ வசதியும் இல்லாத இடத்தில் ரயில் நின்றுள்ளது. அப்போது ரயிலில் பயணித்த இளைஞர் புத்திசாலித்தனமாக செயல்பட்டு, தன்னுடைய மருத்துவ நண்பரின் அறிவுறுத்தலில் வெற்றிகரமாக பிரசவம் பார்த்த நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே உள்ள விரார் பகுதியைச் சேர்ந்தவர் அம்பிகா (வயது 24). இவருக்கு கடந்த வருடம் திருமணம் ஆனது. இதையடுத்து அவர் கர்ப்பமானார். நிறை மாத கர்ப்பிணியான அவருக்கு, அக்டோபர் மாதம் இறுதியில் குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவர் கடந்த 15 ஆம் தேதி தன் உறவினருடன் மருத்துவமனை சென்றுள்ளார்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை பிறக்க இன்னும் தினங்கள் எடுக்கும். எனவே நீங்கள் வீட்டிற்கு சென்று வாருங்கள் என்று கூறியுள்ளார். இதனால் அம்பிகா வீட்டுக்கு புறப்பட்டார். தன் உறவினர் ஒருவருடன் மும்பை உள்ளூர் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
உடனிருந்த உறவினர் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துள்ளார். அம்பிகாவுக்கு பிரசவ வலி அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது. அதே ரயிலில் பயணித்த விகாஸ் திலிப் (வயது 27) என்ற இளைஞர் நிலைமையை உணர்ந்து ரயிலின் அவசர சங்கிலியை பிடித்து நிறுத்தியுள்ளார். ஆனால் ரயில் ராம் மந்திர் என்ற புறநகர் ரயில் நிலையம் ஒன்றில் நின்றது. அங்கு போதிய மருத்துவ வசதிகள் இல்லை.
விகாஸ் திலிப் தொழில்முறை போட்டோகிராபர் ஆவார். அவர் தன்னுடைய தோழியும், மருத்துவருமான தேவிகா தேஷ்முக்கை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆம்புலன்ஸ் வசதி கூட இல்லாதாலும், நேரமாகிவிட்டதாலும் அம்பிகாவுக்கு அங்கேயே பிரசவம் பார்க்க முடிவு செய்யப்பட்டது. தேவிகாவின் ஆலோசனைப்படி, ரயில் நிலையத்தின் நடைமேடையிலேயே தற்காலிக தடுப்புகள் அமைக்கப்பட்டன.
தொடர்ந்து அங்கு வீடியோ கால் மூலம் தேவிகா வழங்கிய அறிவுறுத்தல்களை பின்பற்றி, அம்பிகாவுக்கு விகாஸ் பிரசவம் பார்த்தார். அந்தப் பெண்ணின் உறவினர் மற்றும் சக பயணிகள் உடனிருந்தனர். சிறிது நேரத்தில் அம்பிகாவுக்கு சுகப்பிரசவத்தில் அழகிய குழந்தை பிறந்தது. பிறகு அம்பிகாவும், குழந்தையும் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அங்கு தாய், சேய் இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புத்திசாலித்தனமாக செயல்பட்டு அம்பிகாவுக்கு பிரசவம் பார்த்த விகாஸ் திலிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நண்பன் பட பாணியில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் போட்டோ, வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications