17ஆவது மாடியில் இருந்து குதித்து தொழிலதிபர் தற்கொலை! இறப்பதற்கு முன் செய்த செயலால் அதிர்ச்சி
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த தொழிலதிபர் சுனில் மோதிலால் சடாரங்கனி, சோலாப்பூரில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தின் 17வது மாடியிலிருந்து குதித்து வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
சோலாப்பூரைச் சேர்ந்த சுனில் முல்தானி பேக்கரியின் உரிமையாளராவார். இவர் விஜாப்பூர் சாலை, பனாஸ் அடுக்குமாடி வளாகத்திற்கு வந்திருந்தார்.

அப்போது அவர் நேராக 17ஆவது மாடிக்கு சென்றார். அது மொட்டை மாடி. அங்கு அவர் சுற்றுச் சுவரின் விளிம்பில் சுற்றித் திரிந்ததைக் கண்ட குடியிருப்பாளர்கள், அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியிடம் தெரிவித்தனர். பின்னர் பதறி போன காவலாளியும் ஓர் அலுவலக ஊழியரும் அவரை சமாதானப்படுத்தும் நோக்கில் பேச்சு கொடுத்தபடியே 10-வது மாடிக்கு அழைத்துச் சென்றனர்.
கார் சாவி
ஆனால், சடாரங்கனி தனது கார் சாவி தொலைந்துவிட்டதாகக் கூறி, திடீரென மீண்டும் 17வது மாடிக்கு ஓடினார். சில நிமிடங்களிலே அவர் கட்டடத்திலிருந்து கீழே குதித்தார். அவர் குதிக்கும் முன் பிரார்த்தனை செய்யும் காட்சிகள் உட்பட, இச்சம்பவத்தின் வீடியோக்களை சில குடியிருப்பாளர்கள் பதிவு செய்தனர்.
காவல் துறை
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பலத்த காயங்களுடன் கிடந்த சடாரங்கனியை மீட்டனர். ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். கட்டடத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் பதிவு எண் மூலம் அவரது அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது.
புனேவுக்கு குடிபெயர்ந்தார்
சடாரங்கனி பல ஆண்டுகளுக்கு முன் சோலாப்பூரிலிருந்து புனேவுக்கு குடிபெயர்ந்தவர். அண்மைக் காலமாகவே அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார் என கூறப்படுகிறது. அவரது தற்கொலைக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், தனிப்பட்ட அழுத்தங்கள் காரணமாக இருக்கலாம் என காவல்துறை கருதுகிறது.

சிசிடிவி காட்சிகள்
இதுகுறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மற்றும் குடியிருப்பாளர்கள், குடும்பத்தினரின் வாக்குமூலங்களை ஆய்வு செய்து வருகின்றனர். நீண்டகாலமாக சோலாப்பூரில் அறியப்பட்ட முல்தானி பேக்கரியின் உரிமையாளரான சடாரங்கனியின் மரணம் பலரையும், குறிப்பாக சோலாப்பூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணை தீவிரம்
அவர் எதற்காக இறந்தார் என்பது குறித்து அவரது உறவினர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. ஒருவேளை அவருக்கு கடன் தொல்லை இருந்ததா என்ற கோணத்தையும் போலீஸார் கருத்தில் கொண்டுள்ளனர். மேலும் சுனில் 10ஆவது மாடிக்கு அழைத்து வந்த அபார்ட்மென்ட் காவலாளியிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. மாடியின் விளிம்பில் சுற்றித் திரிந்தவரை கார் சாவி எடுப்பதற்காக ஏன் தனியாக அனுப்பினீர்கள் என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.
எப்படி வந்தார்
மேலும் அவர் இந்த அபார்ட்மென்ட்டுக்குள் எப்படி வந்தார். இங்குதான் வசிக்கிறாரா, ஒரு வேளை அவர் வேறு இடத்தில் வசித்து வந்து, தற்கொலை செய்து கொள்வதற்காக இந்த குடியிருப்புக்கு வந்துள்ளாரா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அங்குள்ள மற்ற சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் ஆராய்ந்து வருகிறார்கள். தொழிலதிபரான சுனிலுக்கு அப்படி என்ன நெருக்கடி ஏற்பட்டிருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044-2464000
மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104
ஐகால் உதவி எண்: 022-25521111
ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications