கணவன் உயிரை காப்பாற்ற கல்லீரல் வழங்கிய மனைவி.. அறுவை சிகிச்சைக்கு பின் இருவரும் உயிரிழப்பு - சோகம்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கல்லீரல் பிரச்சனையால் கணவன் பாதிக்கப்பட்டார். அவருக்கு, அவருடைய மனைவி கல்லீரல் தானம் கொடுத்தார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முடிவடைந்த நிலையில் இருவரும் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் சஹ்யாத்ரி என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. உடல்நலக்குறைவால் இந்த மருத்துவமனைக்கு பாபு கோம்கர் என்பவர் வந்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது பாபுவிற்கு கல்லீரலில் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அதோடு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அவர் உயிருடன் இருப்பார். இல்லாவிட்டால் அவரை காப்பாற்ற முடியாது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்
இதனால் பாபுவின் குடும்பத்தினர் நொந்து போயினர். மேலும் பாபுவின் மனைவி காமினி தனது கணவருக்காக கல்லீரல் தானம் செய்ய முன்வந்தார். அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு காமினியின் கல்லீரலில் ஒரு பகுதி தானமாக பெறப்பட்டது. அறுவை சிகிச்சை மூலமாக அவரது உடலில் இருந்து கல்லீரல் தானமாக எடுக்கப்பட்டது.
ஆகஸ்ட் 15ம் தேதி காமினியின் கல்லீரல் பாபுவிற்கு அறுவை சிகிச்சை மூலமாக பொருத்தப்பட்டது. அதன்பிறகு இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பாபுவின் உடல்நிலை மோசமானது. தொடர்ந்து சிகிச்சை அளித்தாலும் கூட பலனளிக்கவில்லை. ஆகஸ்ட் 17 ம் தேதி அவர் உயிரிழந்தார்.
இதனால் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர். இந்த சோகத்துக்கு நடுவே ஆகஸ்ட் 21ம் தேதி பாபுவின் மனைவி காமினியின் உடல்நிலையும் மோசமானது. அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். கணவனின் உயிரை காக்க மனைவி கல்லீரல் தானம் கொடுத்த நிலையில் அடுத்தடுத்து இருவரும் பலியானது பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.
இதனால் ஆக்ரோஷமான பாபு - காமினி குடும்பத்தினர் தனியார் மருத்துவமனை மீது குற்றம்சாட்டினார். சரியான முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவில்லை. டாக்டர்களின் கவனக்குறைவால் தான் இருவரும் இறந்ததாக கூறினர். இதுபற்றி அறிந்த மகாராஷ்டிரா சுகாதரத்துறை சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது. மருத்துவமனை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதோடு விசாரணைக்கு மருத்துவமனை நிர்வாகம் முழு ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications