மும்பை முதல் மணிப்பூர் வரை...ஜன.14-ல் ராகுல் காந்தி யாத்திரை 2.0- 14மாநிலங்கள் வழியாக பேருந்து பயணம்!
டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமது 2-ம் கட்ட யாத்திரையை ஜனவரி 14-ந் தேதி வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தொடங்குகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாரத் நீதி யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி இப்பயணத்தை பேருந்து மூலம் மேற்கொள்கிறார்.

மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ என்ற பெயரில் பாதயாத்திரை நடத்தினார். 2022-ம் ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பாதயாத்திரை 2023 ஜனவரி 30-ந் தேதி ஜம்மு காஷ்மீரின் ஶ்ரீநகரில் நிறைவடைந்தது.
ராகுல் காந்தியின் முதல் கட்ட பாரத் ஜோடோ யாத்திரையானது 136 நாட்கள் நடைபெற்றது. 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களின் 75 மாவட்டங்கள் வழியாக இந்த பாதயாத்திரையை மேற்கொண்டார் ராகுல் காந்தி. மொத்தம் 4080 கி.மீ பாதயாத்திரையாக நடைபயணம் மேற்கொண்டிருந்தார் ராகுல் காந்தி. இது நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்தது.
ராகுல் காந்தி பாதயாத்திரையை தெலுங்கானாவில் மேற்கொள்ளும் போது யார் இதனை ஒருங்கிணைப்பது என்கிற நிலைமையில்தான் காங்கிரஸ் கட்சி இருந்தது. ஆனால் பாரத் ஜோடோ யாத்திரையின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியையே கைப்பற்றியது.
இந்த நிலையில் ராகுல் காந்தி தமது 2-வது கட்ட பயணத்தை ஜனவரி 14-ந் தேதி தொடங்க உள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஜனவரி 14-ந் தேதி ராகுல் காந்தியின் 2-ம் கட்ட யாத்திரையை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இந்த முறை ராகுல் காந்தி பேருந்தில் பயணிக்கிறார்.
மொத்தம் 14 மாநிலங்கள் வழியாக ராகுல் காந்தியின் பேருந்து யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. Bharat Nyay Yatra- பாரத் நீதி யாத்திரை என்ற பெயரில் இப் பயணத்தை பேருந்தில் ராகுல் காந்தி மேற்கொள்கிறார். இந்த யாத்திரை மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நிறைவடைகிறது.
ராகுல் காந்தியின் பேருந்து யாத்திரையானது 14 மாநிலங்களின் 85 மாவட்டங்கள் வழியாக 66 நாட்கள் மொத்தம் 6,500 கி.மீ. மேற்கொள்ளப்பட உள்ளது. மணிப்பூர், நாகாலாந்து, அஸ்ஸாம், மேகாலயா, மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிஷா, சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் வழியாக மகாராஷ்டிராவை ராகுல் காந்தியின் பேருந்து யாத்திரை வந்தடையும். இம்மாநிலங்களில் பேருந்துகளில் ராகுல் காந்தி பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த யாத்திரையில் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் ராகுலின் சகோதரியுமான பிரியங்கா காந்தியும் இணையக் கூடும் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications