மகாராஷ்டிரா சபாநாயகராக பாஜகவின் ராகுல் நர்வேகர் தேர்வு-முதல் அக்னி பரீட்சையில் தேறிய ஏக்நாத் ஷிண்டே!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபையின் சபாநாயகர் தேர்தலில் பாஜக எம்.எல்.ஏ. ராகுல் நர்வேகர் அமோக வெற்றி பெற்றார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டது. முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இதையடுத்து அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவை பாஜக முதல்வராக்கியது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகி உள்ளார்.

இதையடுத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு நாளை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார். இதற்காக மகாராஷ்டிரா சட்டசபையின் 2 நாட்கள் சிறப்புக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.
மகாராஷ்டிரா சட்டசபை சிறப்புக் கூட்டத்தின் முதல் நாளான இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு சபாநாயகராக இருந்த நானா படேல் ராஜினாமா செய்தார். அவர் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவரானார். அதனையடுத்து துணை சபாநாயகராக இருந்த நர்ஹரி ஜிர்வால் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த ஓராண்டாக சபாநாயகர் தேர்தல் நடைபெறவும் இல்லை.
இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே அரசு பொறுப்பேற்றிருக்கிறது. சட்டசபையில் பெரும்பான்மையை ஏக்நாத் ஷிண்டே அரசு நிரூபிப்பதற்கு முன்னதாக சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. அதிருப்தி சிவசேனா-பாஜக சார்பாக பாஜக எம்.எல்.ஏ. ராகுல் நர்வேகர், சிவசேனா கூட்டணி சார்பாக சிவசேனா எம்.எல்.ஏ ராஜன் சால்வி போட்டியிட்டனர்.
இதனிடையே கோவாவில் முகாமிட்டு இருந்த சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நேற்று இரவு விமானம் மூலம் மும்பை திரும்பினர். முன்னதாக காலையில் கோவா சென்ற முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, அதிருப்தி எம்.எல்.ஏக்களை தம்முடன் அழைத்து வந்தார். அவர்கள் அனைவரும் தாஜ் பிரசிடன்ட் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு சட்டசபைக்கு வருகை தந்தனர்.
இன்று காலை சட்டசபை கூடியதும் சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜகவின் நர்வேகர் மொத்தம் 164 வாக்குகள் பெற்று புதிய சபாநாயகரானார். சிவசேனாவின் ராஜன் சால்விக்கு 107 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. சபாநாயகர் தேர்தலில் வென்ற ராகுல் நர்வேகருக்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications