கைவிட்டுபோன சிவசேனா.. உத்தவ்வை சீண்டிய தம்பி ராஜ் தாக்கரே.. பால்தாக்கரேவின் ஆடியோவால் கிண்டல்
"சிவசேனா விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை முழு மனதுடன் வரவேற்கிறேன். எந்த சித்தாந்ததுக்காக பால் தாக்கரே சிவசேனாவை தோற்றுவித்தாரோ, அதற்கான அர்த்தம் இன்றுதான் மீண்டும் அறியப்படுகிறது" என ராஜ் தாக்கரே கூறினார்.
மும்பை: சிவசேனா கட்சியும், அதன் வில் அம்பு சின்னமும் உத்தவ் தாக்கரேவின் கைவிட்டு சென்ற நிலையில், அவரை சீண்டும் வகையில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார் மகாராஷ்டிரா நவ நிர்மான் கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே.
மேலும், சிவசேனா விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை தான் மகிழ்ச்சியோடு வரவேற்பதாகவும் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இதுதவிர, உத்தவ் தாக்கரேவை கிண்டல் செய்யும் விதமாக அவரது தந்தையும், சிவசேனா நிறுவனருமான பால் தாக்கரே ஆடியோ ஒன்றையும் ராஜ் தாக்கரே வெளியிட்டிருக்கிறார்.

ஷிண்டே அணிக்கு கொண்டாட்டம்
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை இரண்டாக உடைத்து பாஜகவின் துணையுடன் ஆட்சி நடத்தி வருபவர் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே. இதனிடையே, சிவசேனா கட்சியை உத்தவ் தாக்கரே அணியும், ஷிண்டே அணியும் சொந்தம் கொண்டாடி வந்ததால் பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இன்று விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், சிவசேனா கட்சி ஷிண்டே அணிக்கே சொந்தம் என தீர்ப்பளித்தது. மேலும், அக்கட்சியின் வில் அம்பு சின்னத்தையும் ஷிண்டே அணிக்கு ஒதுக்கியது.

பெரும் பதற்றம்
தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு, உத்தவ் அணிக்கு பெருத்த பின்னடையே ஏற்படுத்தியுள்ளது. மேலும், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பால் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே ஆதரவாளர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால் இரு அணிகளுக்கு இடையேயும் மோதல் உருவாகும் சூழல் காணப்படுகிறது. இதனால் பதற்றமான பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

உத்தவை சீண்டிய ராஜ் தாக்கரே
இது ஒருபுறம் இருக்க, தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை உத்தவ் தாக்கரேவின் சித்தப்பா மகனும், மகாராஷ்டிரா நவ நிர்மான் கட்சித் தலைவருமான ராஜ் தாக்கரே வெகுவாக வரவேற்றுள்ளார். இதுகுறித்து ராஜ் தாக்கரே வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சிவசேனா விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை முழு மனதுடன் வரவேற்கிறேன். எந்த சித்தாந்ததுக்காக பால் தாக்கரே சிவசேனாவை தோற்றுவித்தாரோ, அதற்கான அர்த்தம் இன்றுதான் மீண்டும் அறியப்படுகிறது" எனக் கூறியுள்ளார்.

பால் தாக்கரே ஆடியோ
மேலும், பால் தாக்கரேவின் பழைய ஆடியோ ஒன்றையும் தன் பதிவில் இணைத்துள்ளார் ராஜ் தாக்கரே. அந்த ஆடியோவில் பேசும் பால் தாக்கரே, "பணம் இன்று வரும்.. நாளை போகும். ஆனால், ஒரு மனிதன் தனது மதிப்பை இழந்துவிட்டால் அது மீண்டும் அவனுக்கு வராது. அதை எவ்வளவும் பணம் கொடுத்தாலும் வாங்க முடியாது. கறுப்புப் பண சந்தையில் கூட அதை வாங்க முடியாது. எனவே, ஒரு மனிதன் தனது மதிப்பை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்" என கூறுகிறார் பால் தாக்கரே. இந்த வாரத்தைகள், உத்தவ் தாக்கரேவை குத்திக்காட்டுவது போல் உள்ளதாக சொல்லாமல் சொல்கிறார் ராஜ் தாக்கரே.












Click it and Unblock the Notifications