தினம் வரதட்சிணை கேட்டு அடி, உதைதான்.. கணவர் மீதான புகாரை கூறிய போதே மயங்கி விழுந்த ராக்கி சாவந்த்
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மயங்கி விழுந்த ராக்கி சாவந்த்
மும்பை: மும்பையில் தனது கணவர் அடில் கான் துரானி கைது செய்யப்பட்டது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் விளக்கிக் கொண்டிருந்த போது நடிகை ராக்கி சாவந்த் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானவர். இவர் ஏற்கெனவே கடந்த 2019 ஆம் ஆண்டு தொழிலதிபர் ரித்தேஷ் என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராக்கியே மிகவும் உருக்கமாக அறிவித்தார்.

41 வயதாகும் ராக்கி சாவந்த்
41 வயதாகும் ராக்கி சாவந்த் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அடில் கான் துரானி என்ற தன்னை விட வயதில் குறைந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 30 வயதாகிறது. இவர்களது திருமணத்தை 8 மாதங்கள் கழித்து கடந்த ஜனவரி மாதம் தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ராக்கியின் தாய் புற்றுநோயுடன் போராடி வந்தார்.

தாய் இறப்பு
அவர் கடந்த மாதம் இறந்துவிட்டார். பிக்பாஸ் மராத்தி நிகழ்ச்சியில் ராக்கி சாவந்த் இருந்த போது தனது தாயின் மருத்துவமனை கட்டணங்களை அடில் கான் சரிவர செலுத்தாததால் தனது தாய்க்கு சிகிச்சை கிடைக்காமல் அவர் இறக்க நேரிட்டதாகவும் தாயை ஒரு வகையில் அடில் கொலை செய்து விட்டார் என்றும் ராக்கி சாவந்த் குற்றம்சாட்டி வந்தார்.

வரதட்சிணை புகார்
இந்த நிலையில் அடில் கான் வரதட்சிணை கேட்டு தன்னை துன்புறுத்தியதாக மும்பை ஓஷிவாரா காவல் நிலையத்தில் ராக்கி சாவந்த் ஒரு புகாரை அளித்தார். அந்த புகாரை விசாரித்த போலீஸார், ராக்கி சாவந்த் வீட்டிலிருந்த அடில் கானை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

ராக்கி சாவந்த்
தனது புகாரில் ராக்கி சாவந்த் கூறியிருப்பதாவது: அடில் கானுடன் எனக்கு 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் இணைந்து பிசினஸ் அக்கவுண்டை ஓவன் செய்தோம். என்னிடம் சொல்லிவிட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் கார் வாங்குவதற்காக அடில் ரூ 1.5 கோடி பணத்தை அந்த அக்கவுண்ட்டில் இருந்து எடுத்தார்.

திருமணம்
அப்போது தன்னை திருமணம் செய்து கொள்வதாக அடில் உறுதி அளித்ததால் , தனது வருங்கால கணவர் கார் வாங்கினால் நமக்கும் அந்த கார் சொந்தம் தானே என்ற எண்ணத்தில் நானும் அடில் பணம் எடுப்பதை தடுக்கவில்லை. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். ஆரம்பத்தில் நன்றாக இருந்த அவர், போக போக என்னை துன்புறுத்த ஆரம்பித்துவிட்டார்.

வரதட்சிணை புகார்
ஒவ்வொரு முறையும் என்னை வரதட்சிணை கேட்டு துன்புறுத்தி வந்தார். மேலும் எனது முகத்தில் ஆசிட் ஊற்றி விடுவேன் என மிரட்டினார், அது மட்டுமா? என்னை விபத்தை ஏற்படுத்தி கொன்றுவிடுவதாகவும் மிரட்டினார். அத்துடன் என்னை முஸ்லீம் மதத்திற்கு மாற கட்டாயப்படுத்தினார். என்னை இயற்கைக்கு மாறாக உறவு வைத்துக் கொள்ள துன்புறுத்துகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு எங்கள் வீட்டில் கப்போர்டில் இருந்த ரூ 5 லட்சம் பணம் மாயமாகியிருந்தது. மேலும் எனது தாயின் ரூ 2.5 லட்சம் மதிப்பிலான நகைகளையும் காணவில்லை. அப்போதுதான் நான் இல்லாத போது என் வீட்டிற்கு அடில் கான் வந்ததை எனது வீட்டு காவலாளி என்னிடம் சொன்னார் என தன் புகாரில் ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.

டார்ச்சர்
போலீஸில் புகார் அளித்துவிட்டு வெளியே வந்த ராக்கி சாவந்த் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அடில் கான் தன்னை நாள்தோறும் எப்படி நடத்துவார், என்னென்ன டார்ச்சர்களை கொடுப்பார் என்பதை கூறி கொண்டிருந்தார். அது போல் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகார் குறித்தும் அவர் விளக்கிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ராக்கி திடீரென மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் ராக்கியை கைத்தாங்கலாக அழைத்து கொண்டு காரில் அமர வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications