திருப்பதி பிரச்சனையே ஓயலையே.. மும்பை சித்தி விநாயகர் கோவில் லட்டு பாக்கெட்டுகளில் எலிக்குட்டிகள்?
மும்பை: திருப்பதி லட்டு பிரச்சனையில் மையம் கொண்ட புயல் இன்னமும் கரையைக் கடக்காமல் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தற்போது மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவில் லட்டு பாக்கெட்டுகளில் எலிக் குட்டிகள் கிடந்ததாக பரவும் வீடியோ புதிய சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. திருப்பதி லட்டு தயாரிக்கப்படும் நெய்யில் விலங்குகள் கொழுப்பும் கலக்கப்பட்டுவிட்டதாக சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரத்தை முன்வைத்து பல்வேறு 'அரசியல்' நகர்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த பிரச்சனை ஓய்வதற்குள் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவில் லட்டுவும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. சித்தி விநாயகர் கோவில் லட்டு வழங்கப்படும் பாக்கெட்டுகளில் எலிக் குட்டிகள் கிடப்பதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக விளக்கம் அளித்த சித்தி விநாயகர் கோவில் அறக்கட்டளைத் தலைவரும் சிவசேனா எம்.எல்.ஏ.வுமான சதாசர்வன்கர், இந்த கோவிலில் லட்சக்கணக்கான லட்டுகள் விநியோகம் செய்யப்படுகின்றன. லட்டு தயாரிக்கும் இடமும் தூய்மையாகவே வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ கோவிலில் எடுக்கப்பட்டது கிடையாது. வேறு ஒரு இடத்தில் எடுத்துவிட்டு கோவில் பெயரை பயன்படுத்துகின்றனர். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் லட்டு தயாரிக்க பயன்படும் அனைத்து பொருட்களும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும்; பக்தர்களுக்கான பிரசாதமான லட்டு சுகாதாரமானதாக இருப்பதை உறுதி செய்வோம் என்றும் சதாசர்வன்கர் கூறினார்.












Click it and Unblock the Notifications