15 ஆண்டுகளுக்குப் பின் மும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழை -10 மணிநேரத்தில் 250 மி.மீ பதிவு!
மும்பை: ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் மும்பையில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மும்பையில் 10 மணிநேரத்தில் 250 மி.மீ மழை பதிவாகி இருக்கிறது. இதனால் ஒட்டுமொத்தமாக இயல்பு வாழ்க்கை முடங்கிப் போயுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் மும்பைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை மையம். மும்பையில் ஆகஸ்ட் 8-ந் தேதி வரை கனமழை கொட்டும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

பாதித்த இயல்பு வாழ்க்கை
இந்நிலையில் மும்பையில் நேற்று இரவு தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. 10 மணிநேரத்தில் 250 மி. மீ அளவு மழை கொட்டி தீர்த்திருக்கிறது. இதனால் மும்பையின் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாகிவிட்டன. இதனால் மும்பையில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

கட்டிடங்கள் சிக்கினர்
மும்பையில் சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கிய 3 பேரை தேடி வருகின்றன. தண்டவாளங்களில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியதால் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பெரும்பாலான இடங்களில் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டும் இருந்தன.

15 ஆண்டுகளுக்கு பின் கனமழை
15 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் இப்படியான கனமழையை பார்க்கிறோம் என்கின்றனர் மும்பைவாசிகள். கனமழையால் அரபிக் கடலில் பல அடி உயரத்துக்கு அலைகள் எழும்பும் என்றும் யாரும் கடற்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதர மாவட்டங்களிலும்
மும்பையில் மழைபாதித்த இடங்களை அமைச்சர் ஆதித்ய தாக்கரே நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். நிலச்சரிவு ஏற்பட்ட சில இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு பணியினர் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டும் வருகின்றனர். மும்பையை தவிர தானே, ராய்கட், புனே, ரத்னகிரி மாவட்டங்களும் கனமழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications