விரைவில் நாடு முழுவதும் புதிய 20 ரூபாய் நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு
Reserve Bank of India (RBI) has announced a new 20-rupee banknotes that will soon be released in circulation
மும்பை: நாடு முழுவதும் விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டு, அவை புழக்கத்தில் விடப்பட உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. பச்சையும், மஞ்சளும் கலந்த நிறத்தில் புதிய 20 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது.
தற்போது புழக்கத்தில் உள்ள ரூ. 100, ரூ.50, ரூ.20 ஆகிய நோட்டுகளில் புதிய வண்ணத்தில் ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே ரூ.100, ரூ.50 புதிய நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளது.

இதனையடுத்து திட்டமிட்டப்படி தற்போது ரூ.20 புதிய நோட்டையும் ரிசர்வ் வங்கி அச்சிட்டுள்ளது. பச்சையும், மஞ்சளும் கலந்து வெளிர் மஞ்சள் நிறத்தில் இந்த நோட்டு அச்சிடப்பட்டு உள்ளது.
மேலும் எல்லா ரூபாய் நோட்டுகளில் இருப்பது போலவே, தமிழ் உள்ளிட்ட 15 மொழிகளில் 20 ரூபாய் என்று அச்சிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ரிசர்வ் வங்கி, விரைவில் வெளிவர உள்ள புதிய 20 ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் மகாத்மா காந்தி படம் இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.
ரூபாய் நோட்டின் மறுபக்கம் எல்லோரா குகைகளின் படம் அச்சிடப்பட்டிருக்கும் என தகவல் தெரிவித்துள்ளது. நம் நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை விவரிக்கும் வகையில், புதிய 20 ரூபாய் நோட்டுகளின் பின்புறத்தில் எல்லோரா குகைகளின் உருவம் வெளியிடப்படுவதாகவும் விளக்கமளித்துள்ளது.
புதிய 20 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டாலும் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள, அனைத்து 20 ரூபாய் நோட்டுகளும் செல்லும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications