சரத்பவாரின் என்.சி.பி.யிலும் பிளவு? சபாநாயகர் தேர்தலில் வாக்களிக்காத 5 எம்.எல்.ஏக்களால் பரபரப்பு
மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பமாக சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸிலிலும் கலகக் குரல் வெடித்துள்ளதா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. மகாராஷ்டிரா சபாநாயகர் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க வராததால் இந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் பெரும்பான்மை எம்.எல்.ஏக்களை அதிருப்தி தலைவரான ஏக்நாத் ஷிண்டே வளைத்துப் போட்டார். பாஜகவுடனான இந்த அரசியல் நாடகத்தால் முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே இழந்தார்.

இதனையடுத்து ஏக்நாத் ஷிண்டேவை பாஜக முதல்வராக்கியது. துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார். இப்போது சிவசேனா கட்சி பெயர், சின்னம் யாருக்கு என்கிற கிளைமேக்ஸ் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிரா சட்டசபையில் இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. அதிருப்தி சிவசேனா- பாஜகவுடனான வேட்பாளர் ராகுல் நர்வேகர் அமோக வெற்றியைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சிவசேனாவின் ராஜன் சால்விக்கு 107 வாக்குகள்தான் கிடைத்தன.
இத்தேர்தலில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 5 பேர் வாக்களிக்காதது ஏன்? என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே அக்கட்சியின் 2 எம்.எல்.ஏக்கள் சிறையில் உள்ளதால் வாக்களிக்க முடியாது. ஆக மொத்தம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 7 எம்.எல்.ஏக்கள் இன்று வாக்களிக்கவில்லை.
சிவசேனாவை போல தேசியவாத காங்கிரஸிலும் கலகக் குரல் வெடித்திருக்கிறதா? என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது இந்த எம்.எல்.ஏக்கள் விவகாரம்.












Click it and Unblock the Notifications