ரூபாய் மதிப்பு 100-ஐ தாண்டுமா? ஆர்பிஐ களத்தில் இறங்கியும் பலன் கிடைக்காத நிலை!
மும்பை - ஈரான் போர் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது. ஏற்கனவே பல காரணங்களால் பெரும் பாதிப்பில் இருந்து ரூபாய் மதிப்பு, இந்த போர் காரணமாக தடதடவென சரிந்து வருகிறது. தற்போது ஆர்பிஐ தலையீடு, வங்கிகளின் பியூச்சர்ஸ் பொசிஷனில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் மூலம் 2 நாட்களாக ரூபாய் மதிப்பு சிறிய அளவில் மேம்பட்டு தற்போது 93.686 ரூபாய் அளவில் உள்ளது. ஆனால் மார்ச் 30ஆம் தேதி ரூபாய் மதிப்பு 95.22 என்ற வரலாற்று சரிவை பதிவு செய்தது.
இந்த நிலையில் ஈரான் போர் தீவிரமடைந்தால் வரலாறு காணாத அளவுக்கு சரிந்து, அமெரிக்க டாலருக்கு எதிராக 100 ரூபாயை கடந்துவிடும் அபாயம் இருப்பதாக சர்வதேச நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரான் போர் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. இந்தியா போன்ற இறக்குமதி சார்ந்த பொருளாதாரத்திற்கு இது நேரடி பாதிப்பை ஏற்படுத்துகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரிப்பதால், இந்தியாவில் பணவீக்கம் உயர்வதுடன், நடப்பு கணக்கு பற்றாக்குறை மேலும் விரிவடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் வெல்ஸ் பார்கோ மற்றும் வேன்எக் அசோசியேட்ஸ் கார்ப் ஆகிய நிறுவனங்களின் ஆய்வாளர்கள், போர் மற்றும் கச்சா எண்ணெய் விலை நிலை தொடர்ந்தால் ரூபாய் மதிப்பு வேகமாகக் குறைக்கும் என்று எச்சரிக்கின்றனர். ஆப்ஷன் சந்தை தரவுகளும், ரூபாய் மேலும் சரிவை சந்திக்கும் வாய்ப்பு இருப்பதை தெளிவாக காட்டுகிறது என தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே ஆசியாவில் மோசமாக செயல்படும் நாணயங்களில் ஒன்றாக ரூபாய் இருக்கும் நிலையில், தொடர்ந்து வெளியேறும் வெளிநாட்டு முதலீடுகள் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் மிகையில்லை.
மார்ச் மாதத்தில் மட்டும் இந்திய பங்குச் சந்தையில் இருந்து சுமார் 12 பில்லியன் டாலர் மதிப்பிலான வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியுள்ளன. இது இந்திய பங்குச்சந்தை வரலாற்றிலேயே மிகப்பெரிய மாதாந்திர வெளியேற்றமாகக் கருதப்படுகிறது. இந்த முதலீட்டு வெளியேற்றம் நாட்டின் அந்நியச் செலாவணியில் பாதிப்பை ஏற்படுத்தி ரூபாய் மதிப்பை கூடுதலாக கீழே தள்ளியுள்ளது.
RBI நடவடிக்கை
ரூபாய் மதிப்பில் ஏற்பட்டும் சரிவை கட்டுப்படுத்த, ஆர்பிஐ முக்கியமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்திய வங்கிகள் பியூச்சர்ஸ் சந்தையில் வெளிநாட்டு நாணயங்கள் மீது வைத்திருக்கும் பொசிஷன் மதிப்பு ஒரு நாளின் இறுதியில் 100 மில்லியன் டாலருக்கு மேல் இருக்க கூடாது என உத்தரவிட்டது. இதன் மூலம் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை கட்டுப்படுத்தப்பட்டாலும், வங்கிகளுக்கு 4000 கோடி ரூபாய் அளவிலான இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணிப்புகள் வெளியாகியுள்ளது.
ஆனால், இந்த நடவடிக்கை சந்தையில் தற்காலிக தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது. ஆர்பிஐ அறிவிப்புக்குப் பிறகு ரூபாய் மதிப்பு 1.4% வரை வலுவடைந்தாலும், மீண்டும் சரிந்து 95.225 என்ற புதிய வரலாற்று சரிவை எட்டியது.
இதேவேளையில் ஈரான் போர் எப்போது முடியும் என்பதில் நிச்சயமின்மை இருக்கும் காரணத்தால் ரூபாய் மதிப்பு தொடர்ந்து இக்கட்டான சூழ்நிலையிலேயே உள்ளது. ஆனால் டொனால்டு டிரம்ப் தனது சமீபத்தில் பதில் ஈரான் போர் 2 முதல் 3 வாரங்களில் முடிவடையலாம் எனக் கூறியிருந்தாலும், இதை உறுதியாக சந்தைகள் எடுத்துக்கொள்ளாது.
இதேவேளையில் அமெரிக்க ராணுவம் வளைகுடா பகுதிக்கு கூடுதல் படைகளை அனுப்பியிருப்பது, போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பை காட்டுகிறது. இதன் மூலம் உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலை இந்திய ரூபாயின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு, முதலீட்டு வெளியேற்றம் மற்றும் போர் ஆச்சம் ஆகியவை தொடர்ந்தால், ரூபாய் மதிப்பு மேலும் சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளது. இந்த சூழ்நிலையில், RBI நடவடிக்கைகள் தற்காலிக நிவாரணத்தை அளித்தாலும், நிலையான தீர்வாக இது இல்லை.












Click it and Unblock the Notifications