"கையில் பேண்டேஜ்... முதுகில் ஆப்ரேஷன்!" குத்து வாங்கிய சைஃப் அலி கான் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ்
மும்பை: வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியதால் கடந்த 6 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலிவுட் பிரபலம் சைஃப் அலி கான் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இன்று பிற்பகல் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கத்திகுத்திற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மீது கடந்த வாரம் தாக்குதல் நடந்தது. சைஃப் அலி கான் வீட்டில் கொள்ளையடிக்க வந்த மர்ம நபர், அவரை தாக்கியதாகச் சொல்லப்படுகிறதது.

மொத்தம் ஆறு இடங்களில் சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்டு இருந்தார். இதையடுத்து உடனடியாக அவர் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஆப்ரேஷன் உட்பட தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
சைஃப் அலி கான் டிஸ்சார்ஜ்:
கடந்த ஆறு நாட்களாக அவர் மருத்துவமனையிலேயே அட்மிட் செய்யப்பட்டு இருந்தார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே சிகிச்சை முடிந்து இன்று நடிகர் சைஃப் அலிகான் மும்பை லீலாவதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இன்று பிற்பகலில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
கையில் பேண்டேஜ்:
மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அவரை அங்குத் திரண்டிருந்த அவரது ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். வெள்ளை சட்டையும், நீல நிற ஜீன்ஸ் பேண்டும் அணிந்திருந்த சைஃப் அலி கான் கூலிங் கிளாஸையும் அணிந்திருந்தார். மேலும், அவரது இடது கையில் மணிக்கட்டு இருகே கத்திகுத்து காயம் காரணமாக பேண்டேஜ் ஒன்றையும் அணிந்திருந்தார்.அவரது இந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
முன்னதாக சைஃப் அலி கான் காலை 10-12 மணிக்குள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று லீலாவதி மருத்துவமனையின் டாக்டர் நிதின் டாங்கே தெரிவித்திருந்தார். இருப்பினும், சில காரணங்களால் டிஸ்சார்ஜ் செயல்முறை கொஞ்சம் தாமதமானது. இதையடுத்து பிற்பகலில் தான் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது சைஃப் அலி கானின் தாயார் ஷர்மிளா தாகூர் மற்றும் அவரது மனைவி கரீனா கபூர் கான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
என்ன நடந்தது:
கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 16) சைஃப் அலி கான் வீட்டில் மர்ம நபர் ஒருவர் புகுந்துள்ளார். அவர் கொள்ளையடிக்க வீட்டிற்குள் புகுந்ததாகக் கூறப்படுகிறது. முதலில் சைஃப் அலி கான் வீட்டில் வேலை செய்து வந்த பணிப்பெண் தான் மர்ம நபரை நேரில் பார்த்து அலறியுள்ளார். இந்த சத்தம் கேட்டு வெளியே வந்த போது தான் சைஃப் அலி கானை அந்த மர்ம நபர் சரமாரியாகக் கத்தியால் குத்தியுள்ளார். மொத்தம் ஆறு இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் ஏற்பட்டது.
அதில் இரண்டு காயங்கள் ஆழமாக இருந்ததாகவும் குறிப்பாக ஒன்று முதுகுத் தண்டிற்கு மிக அருகிலும் மற்றொரு கத்திக்குத்து இடது கை மணிக்கட்டில் ஏற்பட்டதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. குறிப்பாக முதுகுத்தண்டில் இருந்த கத்தியின் ஒரு பகுதியும் ஆப்ரேஷன் மூலம் நீக்கப்பட்டது.
ஒருவர் கைது:
இந்தத் தாக்குதல் தொடர்பாக முகமது ஷரீபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. அவரை ஆறு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications