வங்கதேசத்தை சேர்ந்தவர்.. நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியது யார்? கைதானவரின் திடுக் பின்னணி
மும்பை: நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய வழக்கில் கைதான நபர் இந்தியாவை சேர்ந்தவர் இல்லை. அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதும், அவர் சட்டவிரோதமாக நம் நாட்டுக்குள் நுழைந்து சைஃப் அலிகானை கத்தியால் குத்தியுள்ளார். மேலும் அவர் யார்? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ரா பகுதியில் ‛சத்குரு சரண்' என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு 12 மாடிகளை கொண்டது. இதில் 4வது மாடியில் உள்ள குடியிருப்பில் நடிகர் சைஃப் அலிகான் வசித்து வருகிறார்.

கடந்த 16ம் தேதி அதிகாலையில் நடிகர் சைஃப் அலிகான் வீட்டுக்குள் நுழைந்த நபர் கொள்ளையடிக்க முயன்றார். அப்போது கண் விழித்த சைஃப் அலிகான் அவரை பிடித்தார். ஆத்திரமடைந்த நபர் அவரை கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டார்.
இதில் அவரது முதுகுப்பகுதியில் கத்தி உடைந்து இருந்தது. 6 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. தற்போது சைஃப் அலிகான் லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கை, கழுத்தில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. முதுகில் குத்தியபடி இருந்த கத்தி அகற்றப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார். அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தான் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபரை போலீசார் இன்று அதிகாலையில் கைது செய்தனர். தானேவில் இருந்த அவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தற்போது அவரை பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் தெரியவந்துள்ளது. அதாவது கைதான நபர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவரது பெயர் முகமது ஹரிபுல் இஸ்லாம். தானே ஹிரானந்தனி எஸ்டேட்டில் மெட்ரோ பணி நடக்கும் இடத்தின் அருகே உள்ள தொழிலாளர் முகாமில் கைது செய்யப்பட்டார்.
போலீசாரிடம் சிக்கியபோது அவர் தனது பெயரை மாற்றி மாற்றி தெரிவித்துள்ளார். முதலில் பிஜோய் தாஸ், விஜய் தாஸ், முகமது இல்யாஸ் உள்ளிட்ட பெயர்களை கூறியுள்ளார். அவரிடம் இருந்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் அந்த நபரின் பெயர் முகமது ஷரிபுல் இஸ்லாம் செஷாத். வயது 30 என்பது தெரியவந்துள்ளது. அதோடு அவர் நம் நாட்டை சேர்ந்தவர் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் நம் நாட்டுக்கான எந்த ஆவணங்களும் அவரிடம் இல்லாத நிலையில் அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அதோடு அவரிடம் இருந்து வங்கதேச நாட்டின் ஆவணங்கள் தான் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனால் அவர் கடந்த 5-6 மாதங்களுக்கு முன்பு சட்டவிரோதமாக வங்கதேசத்தில் இருந்து நம் நாட்டுக்குள் நுழைந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக அவரை கைது செய்த குழுவில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛கைதான நபரிடம் இருந்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் அடிப்படையில் அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. சட்டவிரோதமாக நம் நாட்டுக்குள் நுழைந்து மும்பை வந்துள்ளார்'' என்று கூறியுள்ளார்.
மேலும் கைதான நபர் வெவ்வேறு பணிகளை செய்து வந்துள்ளார். ரெஸ்டாரண்ட்டில் வெயிட்டராகவும், மெட்ரோ கட்டுமான பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார். அதோடு சைஃப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு தப்பிய பிறகு அவர் தொடர்ந்து செய்தி சேனல்களை பார்த்து வந்துள்ளார். கைது நடவடிக்கைக்கு பயந்து செல்போனை ஸ்விட்ச்ஆப் செய்துள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக சைஃப் அலிகான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் முகமது ஷரிபுல் இஸ்லாம் செஷாத் சென்றது, தாதர் ரயில் நிலையத்தில் அவர் நடமாடியது தொடர்பான வீடியோக்கள் வெளியாகின. இந்த வீடியோவில் இருந்து அவரது உருவம் போட்டாவாக எடுக்கப்பட்டு மும்பை பகுதிகளில் ஒட்டி போலீசார் தேடிவந்த நிலையில் அவர் தானேவில் இன்று சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications