பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றி பெற என்ன காரணம் தெரியுமா? சரத் பவார் சொல்றதை பாருங்க
மும்பை: பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதற்கு கெஜ்ரிவாலின் டெல்லி மாடல் தான் காரணம் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட ஐந்து மாநிலத்தில் நடந்துமுடிந்த தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின.
பஞ்சாபில் அபார வெற்றி பெற்ற ஆம் ஆத்மி 42% வாக்குகள் அள்ளியது - காங் 23% சிரோன்மணி 18% பாஜக 6%
இதில் பஞ்சாப் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து நீக்கி, ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது.
பஞ்சாப்
117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்துக்கு தேர்தல் நடந்தது. இதில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. 2017 தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிட்டு 20 தொகுதிகளை வென்றது. ஆனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஒட்டுமொத்தமாக துடைத்தெறிந்து, ஆம் ஆத்மி சட்டசபை செல்ல இருக்கிறது.
சரத்பவார்
பஞ்சாப் வெற்றி குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறுகையில், 'காங்கிரஸ் கட்சி பஞ்சாப் மாநிலத்தில் மோசமாக தோற்றுள்ளது. இந்த முடிவுகளைப் பார்த்து காங்கிரஸ் அதிர்ச்சியில் இருக்கும். ஆட்சியில் இருந்த ஒரு கட்சியை புதிய கட்சி வீட்டுக்கு அனுப்பியுள்ளது. பாஜகவுக்கு சாதகமான நிலை என்ற போதும் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை.
அரவிந்த் கெஜ்ரிவால்
பஞ்சாப் மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். அவர்களிடம் அரவிந்த் கெஜ்ரிவாலின் பிரசாரம் எடுபட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் ஆட்சி செய்துவரும் கெஜ்ரிவாலை மக்கள் நம்பினார்கள். அவர் சொல்லும் டெல்லி மாடல் ஆட்சி பஞ்சாப் வெற்றிக்கு உதவி இருக்கிறது. இந்த வெற்றியை அவர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
பாஜக
அவர்கள் பாஜகவுக்கு மாற்றாக வருவோம் என சொல்லி வருகிறார்கள். வலுவான எதிர்கட்சியை அமைப்பார்கள் என்கிறார்கள். இது நாளையே நடந்துவிடாது. கொஞ்சம் கொஞ்சமாக இது நடக்கவும் வாய்ப்புள்ளது. ஜனநாயகத்தை வலுப்படுத்த உதவ வேண்டியது நம் எல்லோருடைய கடமை'' என்று தெரிவித்துள்ளார் சரத்பவார்.