30 நிமிடம் போதும் எங்களுக்கு.. சஞ்சய் ராவத் அதிரடி
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க 30 மணி நேரம் கால அவகாசத்தை சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ளது. ஆனால், நாங்கள் 30 நிமிடங்களில் பெரும்பான்மையயை நிரூபித்துவிடுவோம் என்று, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் அமைந்துள்ள பட்னாவிஸ் தலைமையிலான அரசு நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. இதன்பிறகு நிருபர்களிடம் பேசினார் சஞ்சய் ராவத்.
சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டணியை கட்டி எழுப்பி, ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வைத்துவிட வேண்டும் என்பதில் ஆரம்பம் முதலே மிகுந்த முனைப்பு காட்டுபவர் சஞ்சய் ராவத்தான். பாஜக தரப்புக்கு சிம்ம சொப்பனமாக மாறியுள்ள அவர் இந்த தீர்ப்பு பற்றி கூறியதை பாருங்கள்:
மகாராஷ்டிரா.. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்போகும் இடைக்கால சபாநாயகர் யார்? 6 பெயர்கள் பரிந்துரை
முதல்வராக அதிகாலையிலேயே, பட்னாவிஸ் பதவி பிரமாணம் செய்து, அரசியலமைப்பைக் கொலை செய்துள்ளனர். இது நமது தேசிய முழக்கமான சத்யமேவா ஜெயதே (உண்மை மட்டும் வெற்றி பெறுகிறது) என்பதற்கு எதிரான கொலை. அவர்கள் ஏன் பயப்படுகிறார்கள்? பதவியேற்ற பிறகு, பெரும்பான்மையை நிரூபிப்பதில் இருந்து அவர்கள் ஏன் ஓடுகிறார்கள்?
இன்று பாராளுமன்றத்தில், அரசியலமைப்பு குறித்து விவாதம் நடைபெறுகிறது. இந்த அரசியலமைப்பு அம்பேத்கர் உருவாக்கியதா? எங்களிடம் 162 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மூன்று முக்கிய அரசியல் கட்சிகளும் (என்.சி.பி, காங்கிரஸ் மற்றும் சிவசேனா) நேற்று ஒன்றாக ஒரே இடத்தில் தங்கள் பலத்தை காட்டின. மகாராஷ்டிரா மக்கள், குடியரசு தலைவர் மாளிகை மற்றும் ஆளுநருக்கு எங்கள் வலிமையை காட்டத்தான் இவ்வாறு செய்தோம்.
உச்சநீதிமன்றம் பாஜக அரசுக்கு 30 மணி நேரம் காலக்கெடு வழங்கியுள்ளது. ஆனால் எங்கள் கூட்டணி பெரும்பான்மையை நிரூபிக்க வெறும் 30 நிமிடம் போதும். இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.