சொந்த கட்சிக்கே துரோகம்.. கண் சிவந்த சரத் பவார்! தேசியவாத காங்கிரஸின் பிரபுல் பட்டேல் நீக்கம்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர் அஜித்பவார் தனது 40 ஆதரவு எம்எல்ஏக்களுடன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். இந்நிலையில், அஜித் பவாருடன் சென்ற பிரபுல் படேல் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக சரத் பவார் அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கெனவே உத்தவ் தாக்ரே தலைமையில் சிவசேனா கட்சி, தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி வைத்து ஆட்சியை அமைத்தது. இதற்கிடையில் சிவசேனா கட்சியில் இருந்த ஷிண்டே, பெரும்பாலான எம்எல்ஏக்களை தன்னோடு இழுத்துக்கொண்டு பாஜகவுடன் கை கோர்த்தார். மட்டுமல்லாது தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்றும் உரிமை கோரினார். இதனையடுத்து பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பில்லாததால் உத்தவ் தாக்ரே தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் பாஜக மாற்றுக்கட்சி எம்எல்ஏக்களை தனது பக்கம் இழுக்கும் வேளையில் ஈடுபட்டுள்ளது. இதன்படி எதிர்க்கட்சியாக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து அதன் மூத்த தலைவர் அஜித்பவார் தனது 40 ஆதரவு எம்எல்ஏக்களுடன் தேசிய ஜனநாயாக கூட்டணியில் ஐக்கியமாகியுள்ளார். ஞாயிறு மதியம் 2.20 மணிக்கு அஜித் பவார் தலைமையில் 40 எம்.எல்.ஏ க்கள் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் ரமேஷ் பாயிஸை சந்தித்து ஆளும் கூட்டணிக்கு ஆதரவு அளித்தனர். தொடர்ந்து துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றார். அவருடன் 8 பேரும் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டனர்.
பின்னர் பேட்டி அளித்த அஜித் பவார், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடு நன்றாக முன்னேறுகிறது. அவரையும், அவரது தலைமையையும் அனைவரும் ஆதரிக்கின்றனர், வரும் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் சேர்ந்து போட்டியிடுவோம். அதற்காகத்தான் இப்போது இந்த முடிவை எடுத்து முழு தேசியவாத காங்கிரஸ் கட்சியாக இணைத்திருக்கிறோம், நாங்கள் தேசியவாத காங்கிரஸ் சின்னத்தை பயன்படுத்துவோம்" என்றும் கூறினார்.

முன்னதாக இவ்வார துவக்கத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாக செய்திகள் வெளியாகின. இதன் பின்னணியிலேயே, ஞாயிறன்று ராஜ்பவனுக்குச் சென்று மாநில ஆளுநர் ரமேஷ் பாயிஸை சந்தித்து, துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். இது மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அஜித் பவாருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக இருந்த பிரபுல் படேலும் சென்றார். இது சரத் பவாருக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.
இந்நிலையில், தேசியவாத காங்கிரசின் செயல்தலைவர் பதவியில் இருந்து பிரபுல் பட்டேல் நீக்கப்பட்டுள்ளார். அதேபோல், எம்.பி. சுனில் தாக்கரேவையும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி சரத்பவார் உத்தரவிட்டுள்ளார். கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் அவரை நீக்குவதாக கட்சியின் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications