மருமகனை நம்பி போச்சே.. சின்னாபின்னமான என்சிபி! இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் சரத் பவார்
மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அஜித் பவார் உரிமை கோரி வரும் நிலையில் இன்று மகாராஷ்டிராவில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் அக்கட்சியின் நிறுவனர் சரத் பவார்.
கடந்த வாரம் மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய கட்சியாக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்களை நிறுவனர் சரத் பவாரின் சகோதரர் மகன் அஜித் பவார் பிரித்து சென்று ஆளும் சிவசேனா - பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சராக பதவியேற்றார்.

கடந்த 2 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏக்களுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்ற அஜித் பவார் மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் என்சிபி எம்.எல்.ஏக்கள் சகன் புஜ்பால், திலிப் வால்சே பாட்டில், தனஞ்ஜெய் முண்டே ஆகியோரும் அமைச்சராக பதவியேற்றனர்.
இந்த விவகாரம் தேசிய அரசியலில் புயலை கிளப்பியது. இதனை எதிர்த்து அக்கட்சியின் நிறுவனர் சரத் பவார் பேசிய நிலையில் தனி அலுவலகத்தையே அஜித் பவார் தொடங்கினார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனது ஆதரவாளர்களை கூட்டி சரத் பவாரையே தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்து பரபரப்பை கிளப்பினார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை 20 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி அதை தலைமையேற்று நடத்தி வந்த சரத் பவாரையே கட்சியில் இருந்து அஜித் பவார் நீக்கியது அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அதிர்ச்சியளித்தது. தான் துணை முதலமைச்சராக பதவியேற்பதற்கு 2 நாட்களுக்கு முன்புதான் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவியேற்றேன் என அஜித் பவார் தெரிவித்தார்.
என்சிபி கட்சியின் 40 எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சிக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் அஜித் பவார் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அஜித் பவார் சிவசேனா - பாஜக கூட்டணியில் இணையும் முடிவுடன் தான் கட்சித் தலைவராகும் முயற்சியில் இறங்கியதாக கூறப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக அவர்கள் தரப்பு வழங்கிய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளது என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதனால் சரத் பவார் தரப்புக்கு கூடுதல் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையே அஜித் பவார் ஆதரவாளர்கள் உண்மையான தேசியவாத காங்கிரஸ் தாங்கள்தான் என்று கூறி கட்சிப் பெயர் மற்றும் சின்னத்துக்கும் அவர்கள் உரிமைகோரி உள்ளார்கள். மறுபக்கம் சரத் பவார் ஆதரவாளர் ஜெயந்த் பாட்டில், அஜித் பவார் தரப்பு எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்திடக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
இந்த நிலையில் இன்று சரத் பவார் மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்கும் வகையில் சுற்றுப் பயணத்தை தொடங்க உள்ளார். அஜித் பவார் ஆதரவு எம்.எல்.ஏக்களான சக்கன் புஜ்பால், தனஞ்ஜெய் முண்டே உள்ளிட்டோரின் தொகுதிகளுக்கு அவர் சுற்றுப்பயணம் செல்கிறார். குறிப்பாக நாசிக், புனே, சோலாபூர் மற்றும் விதர்பா மண்டலத்தில் உள்ள மாவட்டங்களுக்கு சரத் பவார் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications