இறுக்கிய அமலாக்க துறை- பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் மட்டுமே தப்ப முடியும்..சிவசேனா எம்.எல்.ஏ. கதறல்
மும்பை: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அமலாக்கப் பிரிவிடம் சிக்கிய தம்மை காப்பாற்ற வேண்டுமானால் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்தே ஆக வேண்டும் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு சிவசேனா கட்சி எம்.எல்.ஏ பிரதாப் சர்நாயக் கடிதம் எழுதியிருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது.

தனித்து போட்டி
அண்மையில் காங்கிரஸ் தலைவர் நானா படோல், இனி வரும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடும்; மகாராஷ்டிராவில் அடுத்தது காங்கிரஸ் அரசுதான் அமையும் என்று கூறியிருந்தார். இதனால் கடுப்பாகிப் போன சிவசேனா, மாநில சட்டசபைக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று விரும்புகிறதா காங்கிரஸ்? என கேள்வி எழுப்பி இருந்தது.

உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம்
இந்த நிலையில் சிவசேனா கட்சி எம்.எல்.ஏ பிரதாப் சர்நாயக், அபிமன்யு, முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். கர்ணனைப் போல தியாகம் செய்யாமல் நாம் அர்ஜூனைப் போல யுத்தம் செய்தாக வேண்டும் என விரும்புகிறேன். கடந்த 7 மாதங்களாக அன்னிய செலாவணி மோசடி வழக்கை எதிர்கொண்டிருக்கிறேன்.

மோடியுடன் இணக்கம்
ஆனால் சிவசேனா கட்சியிடம் இருந்தோ, அரசிடம் இருந்தோ எந்த உதவியையும் நான் கேட்கவும் இல்லை. என்னைப் போலவே சிவசேனா தலைவர்கள் அனில் பராப், ரவீந்திர வய்கார் ஆகியோரும் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளனர். எங்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டும் எனில் பிரதமர் மோடியுடன் இணக்கமாக போக வேண்டும்.

பாஜகவுடன் கூட்டணி வைப்போம்
இப்போதும் தாமதமாகிவிடவில்லை. முன்னைப் போல பாஜகவுடன் நாம் கூட்டணி சேர்ந்தால் அனைவரையும் காப்பாற்ற முடியும். இவ்வாறு பிரதாப் சர்நாயக் கடிதத்தில் எழுதியுள்ளார்.

பாஜகவின் சித்ரவதை
இக்கடிதம் தொடர்பாக கருத்து தெரிவித்த சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், அப்படி அவர் கடிதம் எழுதியிருந்தது உண்மையா என்பது தெரியவேண்டும். அப்படி அவர் எழுதியது உண்மை எனில் மத்திய பாஜக அரசு எந்த அளவுக்கு எங்கள் எம்.எல்.ஏக்களை சித்ரவதை செய்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications