ஐரோப்பிய எம்.பிக்கள் குழுவை காஷ்மீருக்குள் அனுமதித்ததற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு
மும்பை: ஜம்மு காஷ்மீருக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தின் எம்.பிக்கள் குழுவை மத்திய அரசு அனுமதித்ததற்கு மத்தியில் ஆளும் பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவு நீக்கப்பட்டதை தொடர்ந்து அங்குள்ள நிலைமைகளை ஐரோப்பிய எம்.பிக்கள் 23 பேர் கொண்ட குழு பார்வையிட்டு வருகிறது. ஐரோப்பிய எம்.பிக்கள் குழு காஷ்மீர் சென்ற நிலையில் பிற மாநிலத்தவரை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மத்தியில் ஆளும் பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா, ஐரோப்பிய எம்.பிக்கள் குழுவை காஷ்மீருக்குள் அனுமதித்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் இது தொடர்பாக எழுதப்பட்டுள்ளதாவது:
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. சபை தலையீட்டை நாம் அனுமதிப்பது இல்லை. அப்படியான நிலையில் ஐரோப்பிய எம்.பிக்கள் குழுவை எப்படி அனுமதிக்கலாம்?
ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனா எந்த யோசனையை முன்வைத்தாலும் பரிசீலிப்போம்: மூத்த காங். தலைவர் சவாண்
ஐரோப்பிய எம்.பிக்கள் குழுவை அனுமதித்ததன் மூலம் இப்பிரச்சனை சர்வதேச விவகாரமாக்கப்படுகிறது. இது எதிரிகளுக்குத்தான் சாதகமாக இருக்கும்.
ஜம்மு காஷ்மீரில் சுமூக நிலை நிலவுகிறது என்கிற சூழலில் ஐரோப்பிய எம்.பிக்கள் குழுவை அனுமதிப்பதற்கு என்ன தேவை ஏற்பட்டிருக்கிறது? ஜம்மு காஷ்மீர் விவகாரம் என்பது சர்வதேச விவகாரம் அல்ல. இவ்வாறு சாம்னாவில் எழுதப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி உள்ளது. ஆனால் ஆட்சி அமைப்பதற்கு சிவசேனா தொடர்ந்து நிபந்தனைகளை விதித்து வருகிறது.
இந்நிலையில் மத்திய பாஜக அரசை சிவசேனா விமர்சித்து சாம்னாவில் தொடர்ந்து எழுதி வருவது குறிப்பிடத்தக்கது.