விடுமுறையிலிருந்த அதிகாரியை கூட்டி வந்து துளசிராம் மீது என்கவுண்டர்.. ஆதாரங்கள் அழிப்பு! சிபிஐ வாதம்
Recommended Video
மும்பை: குஜராத்தில் நடந்த துளசிராம் பிரஜாபதி என்கவுண்டரில் ஈடுபட்ட அதிகாரியின், விடுமுறை தொடர்பான ஆதாரங்களை ஐபிஎஸ் அதிகாரி அழித்துவிட்டதாக சிபிஐ வாதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2005ம் ஆண்டு நவம்பரில் குஜராத்தில் தீவிரவாத எதிர்ப்பு படையால், சுட்டுக் கொலை செய்யப்பட்ட சொராபுதீன் ஷேக்கின் கூட்டாளி துளசிராம் பிரஜாபதி 2006ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். குஜராத்திலிருந்து ராஜஸ்தானுக்கு துளசிராமை அழைத்து சென்றபோது தப்ப முயன்றதாகவும் அப்போது, போலீசார் என்கவுண்டர் செய்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, மும்பையிலுள்ள, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், சொராபுதீன் ஷேக்கை என்கவுண்டர் செய்த ராஜஸ்தானை சேர்ந்த சீனியர் இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹ்மான் தரப்பு வழக்கறிஞர் வகாப் கான் தனது வாதத்தை, எஸ்.ஜே.ஷர்மா முன்னிலையில், முன் வைத்தார்.
ஆதாரங்கள் அடிப்படையில் வழக்கு நடைபெறவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். சிபிஐ விசாரணை அறிக்கையின்படி, அப்துல் ரஹ்மான்தான், சொராபுதீன் ஷேக்கை சுட்டுவிட்டு, அதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தார். அதன்பேரில்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், ரஹ்மான் தரப்பு வழக்கறிஞர் வகாப் கான், இந்த தகவலை மறுத்து வாதம் முன் வைத்தார். சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கை மிகவும் மெத்தனமாக கையாண்டுள்ளனர். இந்த வழக்கு யூகத்தின் அடிப்படையில் புனையப்பட்டுள்ளது. இது விசாரணை நடத்தும் விதம் கிடையாது. என்கவுண்டருக்கு உத்தரவிட்டது யார், யார் உத்தரவில் கையெழுத்திட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தை அறிய, அப்துல் ரஹ்மானிடமிருந்து கையெழுத்து மாதிரி கூட பெறப்படவில்லை.
2 சாட்சியங்கள், ராஜஸ்தான் காவல்துறையை சேர்ந்த மூன்று பேரை பார்த்ததாக சாட்சியளித்துள்ளனர். ஆனால், அதில் அப்துல் ரஹ்மான் பெயர் குறிப்பிடப்படவில்லை. இவ்வாறு வாதம் முன் வைக்கப்பட்டது.
அதேநேரம், விடுமுறையில் இருந்த பாண்டியாவை பிரஜாபதியை என்கவுண்டர் செய்வதற்காக வரவழைக்க, குஜராத் முன்னாள் தீவிரவாத எதிர்ப்பு படை தலைவர் வன்சாரா, ஐபிஎஸ் அதிகாரி விபுல் அகர்வாலுக்கு அறிவுறுத்தியுள்ளார். விடுமுறையில் இருந்த ஆதாரங்கள் அகர்வாலால் அழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சிபிஐ தனது வாதத்தில் குறிப்பிட்டது.