பெண் ஐடி ஊழியர்களை குறிவைத்து அத்துமீறல்.. ஆபாச வீடியோ அனுப்பி டார்ச்சர்.. நாசிக் விவகாரத்தில் பகீர்
மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள நாசிக்கில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் கட்டாய மதமாற்றம் மற்றும் பாலியல் அத்துமீறல் நடந்ததாகப் புகார் எழுந்து நாட்டையே அதிர வைத்துள்ளது. இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில் பல பரபர தகவல்கள் வெளியாகியுள்ளதாம். குறிப்பாக சோஷியல் மீடியா மூலம் என்ன செய்தார்கள் என்பது குறித்த தகவல்கள் பகீர் கிளப்பியுள்ளது.
இந்தியாவில் மிகப் பெரிய வேலைவாய்ப்பு துறைகளில் ஒன்றாக இருப்பது ஐடி துறை.. பல லட்சம் இளைஞர்கள் இதில் நேரடியாகவும் பல கோடி பேர் இதன் மூலம் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளைப் பெறுகிறார்கள். இதற்கிடையே இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் நாசிக் கிளையில் சில மோசமான சம்பவங்கள் நடந்துள்ளது.

கட்டாய மதமாற்ற முயற்சி
அங்குக் கட்டாய மதமாற்ற முயற்சி நடந்ததாக வெளியான தகவல் அதிர வைத்துள்ளது.. இந்த விவகாரம், இப்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. மதமாற்றம் என்ற எல்லையைத் தாண்டி, பெண் ஊழியர்களுக்குக் கொடுக்கப்பட்ட பாலியல் ரீதியான தொல்லைகள் குறித்த புதிய தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து ஐடி வட்டாரத்தையே அதிரவைத்துக் கொண்டிருக்கின்றன.
இந்த விவகாரம் குறித்த பாதிக்கப்பட்ட பெண் ஒருவரும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் சில ஆண்டுகளாகவே தன்னிடம் அநாகரீகமாக நடந்து கொள்வதாகவே கூறியுள்ளார்.
பாலியல் தொல்லை
இந்த வழக்கை விசாரித்து வரும் போலீசார், கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்களை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்ந்து பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆபாசமான கமெண்ட்டுகள், ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் மற்றும் மெசேஜ்களை அனுப்பி மனரீதியாகத் துன்புறுத்தியுள்ளனர். கைதானவர்களின் செல்போன்களை ஆய்வு செய்ததில், அழிக்கப்பட்ட பல சாட் விவரங்களை மீட்டெடுக்கும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தச் சதித்திட்டத்தின் பின்னணியில் இருப்பதாகக் கருதப்படும் நிதா கான் என்ற பெண் மட்டும் இன்னும் பிடிபடாமல் தலைமறைவாக உள்ளார். மத ரீதியான உள்நோக்கத்துடன் மற்ற பெண் ஊழியர்களிடமும் இவர்கள் தவறாக நடந்துகொண்டார்களா? என்ற கோணத்திலும் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
மனித உரிமை ஆணையம்
இந்த விவகாரத்தின் தீவிரத்தை உணர்ந்து, தேசிய மனித உரிமை ஆணையம் இப்போது நேரடியாகத் தலையிட்டுள்ளது. மகாராஷ்டிர மாநில காவல்துறை மற்றும் டிசிஎஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு அதிரடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அடுக்கடுக்கான கேள்வி
இந்தச் சம்பவம் கடந்த சில ஆண்டுகளாகவே அங்கு நடந்து வந்துள்ளதாம்.. எனவே, நிறுவனத்தின் உள் புகார் குழு என்ன செய்து கொண்டு இருந்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.. இதுவரை அந்த அமைப்புக்கு வந்த புகார்கள் எத்தனை? என்பது குறித்து முழு விவரங்களையும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள டிசிஎஸ்-ன் அனைத்துக் கிளைகள் மற்றும் பிபிஓ-க்களின் உரிம ஆவணங்களைச் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு சர்வதேசத் தரம் வாய்ந்த ஐடி நிறுவனத்திற்குள் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே உள்ளது.














Click it and Unblock the Notifications