3 முஸ்லிம்களை தேடி கொன்றுள்ளார்.. பயங்கரவாத தாக்குதல்! RPF வீரர் பாஜக வேட்பாளர் ஆவாரா? ஒவைசி ஆவேசம்
மும்பை: ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த காவலர் தனது உயரதிகாரி மற்றும் 3 முஸ்லிம் பயணிகளை சுட்டுக்கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், முஸ்லிம்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என ஏஐஎம்ஐஎம் தலைவர் அசதுத்தீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
ஜெய்பூரில் இருந்து மும்பை நோக்கி நேற்று காலை சென்றுகொண்டு இருந்த ரயிலில் சேத்தன் சிங் என்ற ரயில்வே பாதுகாப்பு படை வீரர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். இந்த நிலையில் மும்பை ரயில் நிலையம் வந்தடைவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாக வைதர்னா என்ற ரயில் நிலையத்தை தாண்டி பால்கர் என்ற பகுதிக்கு அருகே ரயில் சென்றுகொண்டு இருந்தது.

அப்போதுதான் அந்த கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. அதிகாலை 5 மணியளவில் தனது உயரதிகாரியான எஸ்.ஐ. டீக்காராம் மீனாவையையும், 3 ரயில் பயணிகளையும் சேத்தன் சிங் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.ஐ. டீக்காராம் மீனாவை சுட்டுக் கொன்றபின் பி5 என்ற பெட்டியில் உள்ள ஒரு பயணியை சேத்தன் சிங் சுட்டுக் கொலை செய்துள்ளார்.
அதன் பின்னர் பி6 என்ற பெட்டிக்கு சென்ற அவர் அங்குள்ள ஒருவரையும் அவர் கொடூரமாக கொலை செய்து இருக்கிறார். அதை தொடர்ந்து பி5 மற்றும் பி6 பெட்டிகளுக்கு இடையே இருந்த பேண்ட்ரி காரில் உள்ள ஒருவரையும் சேட்டன் சிங் சுட்டுக்கொலை செய்து உள்ளார். ஆர்பிஎப் எஸ்.ஐயை தவிர சுட்டுக்கொல்லப்பட்ட மற்ற 3 பேருமே இஸ்லாமியர்கள்.
காதிர்பாய் முஹம்மது ஹுசைன் பன்புர்வாலா (48), அக்தர் அப்பாஸ் அலி (48), சதார் முஹம்மது ஹுசைன் ஆகிய பயணிகள் சேத்தன் சிங்கால் கொல்லப்பட்டு உள்ளனர். கொலை செய்த பின்னர், இறந்தவர் உடல் அருகே நின்றுகொண்டுகொண்டு சேத்தன் சிங் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
"பாகிஸ்தானுடன் தொடர்புடையவர்களைதான் நான் கொலை செய்தேன். இந்தியாவில் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் மோடிக்கும் யோகிக்கும் வாக்களிக்க வேண்டும்." என்று அந்த சேத்தன் சிங் மிரட்டல் விடுக்கும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்த பின் ரயிலில் உள்ள அபாய சங்கிலியை இழுத்து நிறுத்தி சேத்தன் சிங் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்று இருக்கிறார்.

அப்போது போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்து இருக்கின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸை சேர்ந்தவர் சேத்தன் சிங். இவருடன் மேலும் 2 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஏஐஎம்ஐஎம் தலைவர் அசதுத்தீன் ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதாவது, "இது முஸ்லிம்களுக்கு எதிராக குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு பயங்கரவாத தாக்குதல். தொடர் இஸ்லாமிய வெறுப்பு பேச்சுக்களா ஏற்பட்ட விளைவு இது. பிரதமர் நரேந்திர மோடி இதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். கொலை செய்த ஆர்.பி.எப் வீரர் எதிர்காலத்தில் பாஜக வேட்பாளராக வருவாரா? அவருக்கு ஜாமீன் கிடைக்க அரசு உதவி செய்யுமா? அவர் விடுதலை செய்யப்படும்போது மாலை அணிவித்து வரவேற்கப்படுவாரா? தவறு என்று நிரூபிக்கப்பட்டதில் மகிழ்ச்சி." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications