மொத்தமாக உயிரிழக்கும் விமானிகள்.. தடுப்பூசியில் முன்னுரிமை வழங்கணும்.. ஐகோர்ட் கதவை தட்டிய விமானிகள்
மும்பை: கொரோனாவுக்கு உயிரிழந்த விமானிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்ககோரி இந்திய விமானிகள் கூட்டமைப்பு மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டம் காட்டி வரும் கொரோனா வைரஸ் பல்வேறு உயிர்களை காலி செய்து வருகிறது.
கொரோனா வைரஸ் தொடர்பான பணியில் விமானிகள், விமான பணியாளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
விமானிகளின் பெரும் பணி
இந்தியாவில் விமான போக்குவரத்து இன்னும் முழுமையாக சீரடையாத நிலையில், கொரோனா முதல் அலையில் வெளிநாடுகளில் பரிதவித்த இந்தியர்களை சிறப்பு விமானங்கள் இயக்கி வந்தே பாரத் திட்டத்தின் மூலம் அழைத்து வந்துள்ளனர். மேலும் வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சை பொருட்கள் கொண்டு வருதல் ஆகிய பணிகளில் ஓய்வின்றி விமானிகள் உழைத்து வருகின்றனர்.,
17 விமானிகள் உயிரிழப்பு
இப்படி கடுமையாக உழைக்கும் விமானிகள் பலர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். கடந்த மே மாதத்தில் மட்டும் சுமார் 17 விமானிகள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் விஸ்டாரா ஆகிய நிறுவனங்களை சார்ந்த விமானிகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இதில் இண்டிகோ விமானிகள் 10 பேரும், விஸ்டாரா விமானிகள் 2 பேரும் அடங்குவார்கள்.
ஏர் இந்தியா விமானிகள்
ஏர் இந்தியா மூத்த விமானிகள் மட்டும் 5 பேர் இறந்துள்ளனர். தொடர்ந்து விமானிகள் கொரோனாவுக்கு பலியாகி வருவதால் ''விமானிகள் மட்டுமின்றி அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா தடுப்பூசிபோட முன்னுரிமை அளிக்க வேண்டும்'' என்று இந்திய விமானிகளின் கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு
இந்த நிலையில் உயிரிழந்த விமானிகளுக்கு இழப்பீடு வழங்ககோரியும், தடுப்பூசிக்கு முன்னுரிமை வழங்கும்படியும் இந்திய விமானிகளின் கூட்டமைப்பு மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்த மனுவில், ' விமானிகள் நாட்டுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கி வருகின்றனர்.
ரூ.10 கோடி நிவாரண தொகை
இதில் பலர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்த விமானிகளின் குடும்பங்களுக்கு ரூ.10 கோடி நிவராண தொகை வழங்க வேண்டும். விமானிகளை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்துவதற்கு விமானிகளுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.