மகாராஷ்டிராவின் முதல் பெண் தேர்தல் ஆணையர் நீலா சத்யநாராயணா கொரோனா தாக்கி மரணம்
மகாராஷ்டிராவின் முதல் பெண் தேர்தல் ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்ற நீலா சத்யநாராயணா கொரோனா நோய் தாக்கி உயிரிழந்துள்ளார் அவருக்கு வயது 72.
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்ற நீலா சத்யநாராயணா இன்று கொரோனா நோய்க்கு பலியாகியுள்ளார். 72 வயதான நீலா சத்யநாராயணாவிற்கு ஒருமகனும், மகளும் உண்டு. 1972ஆம் ஆண்டு பேட்ச்சில் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு பெற்றார். கொரோனா தொற்று காரணமாக மும்பை செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமடைந்தார்.
கொரோனா என்ற கொடிய அரக்கன் ஏழை, பணக்காரன், படித்தவர்கள், படிக்காதவர்கள் என்றெல்லாம் பார்ப்பதில்லை. உலகம் முழுவதும் ஒன்றரை கோடி மக்களைத் தொட்டுப் பார்த்துள்ளது கொரோனா. 70 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்திருந்தாலும், 6 லட்சம் பேர்வரை உயிரிழந்துள்ளனர். டாக்டர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளும் கொரோனாவிற்கு தப்பவில்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல் பெண் தேர்தல் ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்ற நீலா சத்யநாராயணா நேற்று கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளார்.

ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ. பட்டதாரியான நீலா சத்ய நாராயணா 1972ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் இணைந்தார்.
ஆங்கிலம், இந்தி, மராட்டி ஆகிய மூன்று மொழிகளிலும் புலமை வாய்ந்தவர் நீலா. இந்தியிலும் மராட்டியிலும் 150க்கும் அதிகமான பாடல்களை எழுதி இசையமைத்திருக்கிறார். சமுதாயத்தில் நலிவுற்றவர்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிக்கும் பரம ஏழை மக்களுக்கெல்லாம் பல உதவியை செய்திருக்கிறார்.
இவரது குடும்ப வாழ்க்கையே மற்றவர்களுக்கு ஒரு படிப்பினையாகத்தான் அமைந்துள்ளது. இவருக்கு இரண்டு குழந்தைகள். ஒரு மகள், ஒரு மகன். மூத்த பெண் ஒரு உளவியல் மருத்துவர். இரண்டாவது மகன் உளரீதியில் பாதிக்கப்பட்டவர். தனது மகனுக்கு உள்ள பிரச்சினைகளை பின்னணியாக வைத்து இவர் உருவாக்கியுள்ள படைப்புதான் ஒன் ஃபுல், ஒன் ஹாஃப். சொந்த வாழ்வில் எத்தனையோ சோகம் இருந்தாலும் தனது அரசுப் பணியைத் திறம்பட இவர் நிறைவேற்றினார். நாக்பூரில் துணை கலெக்டர், பிவண்டியில் ஸப் டிவிஷனல் அதிகாரி, தானேயில் அடிஷனல் கலெக்டர், தானே கலெக்டர் என்று பல பதவிகளை வகித்துள்ளார்.
திறமையான பணிக்காக பல விருதுகளையும் பெற்றிருக்கிறார் நீலா சத்யநாராயணா. இந்தி மொழி பேசாத எழுத்தாளர்களுக்கான இந்திய அரசாங்க விருது, கர்நாடகா மாநிலத்தின் மகாத்மா காந்தி விருது, ஆசீர்வாத் விருது, ஸ்த்ரீ சக்தி விருது, சென்ற ஆண்டில் வழங்கப்பட்ட மகாராஷ்டிரா அரசின் ஸ்த்ரீ கௌரவ் விருது, மும்பையில் FICCIயின் கோல்டன் மகாராஷ்ட்ரா விருது என்று பல விருதுகளை வென்றுள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு வருவாய்துறையில் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன்பின்னர் தலைமைத் தேர்தல் அதிகாரியாக பணியாற்றினார். 42 ஆண்டுகள் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி பல சாதனைகளை புரிந்துள்ளார். ஐஏஎஸ் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின் மகாராஷ்டிரா மாநில தேர்தல் ஆணையர் பதவியை அலங்கரித்தார். தலைமைத்தேர்தல் அதிகாரியாக இருந்தபோது அரசியல் ரீதியாக வந்த எத்தனையோ சவால்களை சமாளித்து திறம்பட பணியாற்றியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நீலா சத்யநாராயணா மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித்தலைவர்களும், ஐஏஎஸ் அதிகாரிகளும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications