அப்போ ஹெலிகாப்டர் இப்போ ரூ.415 கோடி சொத்து; அள்ள அள்ள குறையாத மோசடி பணம் - அதிகாரிகள் அதிர்ச்சி
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் ரூ.34,000 கோடி அளவில் வங்கி மோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டு மேலெழுந்தது. இதனையடுத்து சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் சில நாட்களுக்கு முன்னர் ஹெலிகாப்டர் ஒன்று இந்த மோசடியில் தொடர்புடைய பிரபல கட்டட தொழிலதிபர் வீட்டிலிருந்து பறிமுதல் செய்தனர். இந்நிலையில், தற்போது ரூ.415 கோடி மதிப்பிலான சொத்துக்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
யெஸ் பேங்க்-டிஎச்எஃப்எல் வழக்கில் வங்கிகளுக்கு ₹ 34,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்திய வழக்கில் சஞ்சய் சாப்ரியா மற்றும் அவினாஷ் போசலே ஆகியோர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.
6 இடங்கள்.. 6 வியூகங்கள்.. ஒரே இரவில் அமெரிக்காவை திக்கி திணற வைத்த சீனா.. டிராகனின் மெகா பதிலடி!
மோசடி
மகாராஷ்டிரா மாநிலத்தின் பிரபல கட்டட தொழில் நிறுவனங்களான 'ரேடியஸ் டெவலப்பர்ஸின்' சஞ்சய் சாப்ரியா மற்றும் ஏ'பிஐஎல் இன்ஃப்ராஸ்ட்ரக்சரின்' அவினாஷ் போசலே ஆகியோர் யெஸ் வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தலைமையிலான 17 வங்கிகளின் கூட்டமைப்பிற்கு ரூ.34,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தனர். இது இந்தியாவின் மிகப் பெரிய வங்கி மோசடி ஒன்றாக கருதப்படுகிறது. திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் மோசடி என்று அழைக்கப்படும் இதில் ரூ 34,614 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான அவினாஷ் போன்சேலுக்கு சொந்தமான இடங்களில் சமீபத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஹெலிகாப்டர்
சோதனையில் கைப்பற்றப்பட்ட விஷயம் சிபிஐ அதிகாரிகளைச் சற்று மிரளச் செய்துவிட்டது. மோசடி தொழிலதிபரான அவினாஷ் போன்சேலுக்கு சொந்தமான வீட்டில் இருந்து சிபிஐ அதிகாரிகள் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டரை பறிமுதல் செய்தனர். போன்சேலுக்கு சொந்தமான இடத்தில் இந்த ஹெலிகாப்டரை அதிகாரிகள் கைப்பற்றினர். வங்கி மோசடி வழக்கு நடைபெற்று வரும் நிலையில், அவினாஷ் இதை சமீபத்தில்தான் வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் சிபிஐ இன்றும் சோதனையை தொடர்ந்தது.
மும்பை
இன்று நடைபெற்ற சோதனையில் மும்பையின் சான்டாக்ரூஸில் உள்ள ரூ.116.5 கோடி மதிப்புள்ள நிலம், பெங்களூரில் உள்ள ரூ.115 கோடி மதிப்புள்ள நிலத்தொகுப்பில் சஞ்சய் சாப்ரியாவுக்கு சொந்தமான 25% பங்குகள், மும்பை சான்டாக்ரூஸில் ரூ.3 கோடி மதிப்புள்ள மற்றொரு பிளாட், அதேபோல டெல்லி விமான நிலையத்தில் சாப்ரியாவுக்கு சொந்தமான ஹோட்டலில் இருந்து பெறப்படும் ரூ.13.67 கோடி லாபம், ரூ.3.10 கோடி மதிப்புள்ள சஞ்சய் சாப்ரியாவின் மூன்று உயர் ரக சொகுசு கார்கள் என ரூ.415 கோடி மதிப்பிலான சொத்துக்களை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
நிலம்
இந்த வரிசையில், வினாஷ் போசலேவுக்கு சொந்தமான ரூ.102.8 கோடி மதிப்புள்ள மும்பை டூப்ளக்ஸ் பிளாட், புனே மற்றும் நாக்பூரில் உள்ள ரூ.60.86 கோடி மதிப்பிலான நிலங்கள் ஆகியவையும் அடங்கும் என அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக இதே டிஎச்எஃப்எல் மோசடி தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் நடத்திய ரெய்டில் இந்திய மேஸ்ட்ரோக்கள் எஃப்என் சௌசா மற்றும் எஸ்எச் ராசா ஆகியோரின் ஓவியங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு மட்டும் சுமார் ரூ.5.50 கோடி ஆகும். அந்தச் சோதனையின் போது, 1956ஆம் ஆண்டு எஸ்.எச்.ராசாவின் 3.50 கோடி ரூபாய் மதிப்புள்ள 'வில்லேஜ்' என்ற கேன்வாஸ் ஓவியம் மற்றும் எஃப்.என்.சௌசாவின் ரூ.2 கோடி மதிப்பிலான கேன்வாஸ் ஓவியத்தை அதிகாரிகள் கைப்பற்றி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.