பாஜக vs ட்விட்டர்.. அப்போது பிரசார பீரங்கி, இப்போது மோதலின் உச்சம்.. ஏன் தெரியுமா? விளக்கும் சிவசேனா
மும்பை: ஒரு காலத்தில் பாஜகவின் பிரசார பீரங்கியாக இருந்த ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை, இப்போது எதிர்க்கட்சிகளும் கைப்பற்றத் தொடங்கிவிட்டதாலேயே மத்திய பாஜக அரசு டெக் நிறுவனங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயல்வதாக சிவசேனா விமர்சித்துள்ளது.
புதிய டிஜிட்டல் கொள்கைகளை அனைத்து டெக் நிறுவனங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த புதிய கொள்கையை பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துவிட்டன.
இருப்பினும் ட்விட்டர் நிறுவனம் தற்போது வரை இந்தக் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கவில்லை. மத்திய அரசு கடைசியாக 15 நாட்கள் காலக்கெடுவை அறிவித்து, அதற்கு புதிய கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

சிவசேனா விமர்சனம்
இந்நிலையில், மத்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்திற்கும் இடையே நடைபெறும் இந்த மோதல் போக்கை விமர்சித்து சிவசேனா, தனது அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தக் கட்டுரையில், "கொஞ்ச காலத்திற்கு முன்பு வரை, பாஜக மற்றும் மோடி அரசு பிரசாரங்களை முன்னெடுக்கும் தூணாகவும் ஆத்மாவாகவும் இருந்தது ட்விட்டர் தான்.

சுமையாகிவிட்டது
ஆனால், இப்போது அவர்களுக்கு ஒரு சுமையாக மாறியுள்ளது. இதை எப்படி தூக்கியெறியலாம் என அவர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். இன்று, ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களைத் தவிர, நாட்டின் அனைத்து ஊடகங்களும் மோடி அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் தான் உள்ளன.

2014ஆம் ஆண்டு தேர்தல்
கடந்த சில ஆண்டுகளாகவே ஒருவர் குறித்துப் பொய் செய்திகளைப் பரப்பவும் ஒருவரது பிம்பத்தைச் சேதப்படுத்தவுமே சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது மற்ற கட்சிகளைவிட பாஜகவுக்கு நன்றாகவே தெரியும். கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலின்போதே, இதில் அவர்கள் கைதேர்ந்து இருந்தார்கள். அந்த நேரத்தில் மற்ற கட்சிகளைவிட அவர்கள் தான் ஆன்லைனில் ஆக்டிவாக இருந்தார்கள். களத்தில் ஆக்டிவாக இருப்பதைவிட அப்போது, சைபர் தளத்திலேயே ஆக்டிவாக் இருந்தனர்.

தலைவர்களுக்கு எதிரான பிரசாரம்
ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் ராகுல் காந்திக்கு எதிராக எப்படிப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தினார்கள். யாருடைய ஒப்புதலுடன் அப்படிப் பயன்படுத்தினார்கள். டாக்டர் மன்மோகன் சிங் போன்ற மூத்த தலைவர்களை அவர்கள் எப்படி அழைத்தார்கள். வாழ்க்கை முழுவதும் மக்களுக்கு உழைக்கும் உத்தவ் தாக்கரே தொடங்கி மம்தா பானர்ஜி, ஷரத் பவார், பிரியங்கா காந்தி, முலாயம் சிங் யாதவ் போன்ற அரசியல் தலைவர்களுக்கு எதிராக எப்படிப்பட்ட ஒரு பிரசாரத்தை முன்னெடுத்தார்கள் என அனைவருக்கும் தெரியும்,

திருப்பியடிக்கும் எதிர்க்கட்சிகள்
இந்த சைபர் பிரச்சாரங்களை பாஜக மட்டும் செய்து வந்தபோது அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஆனால், இப்போது சைபர் வெளியில் எதிர்க்கட்சிகளும் வளர்ந்துவிட்டன. பதில் தாக்குதல்களை எதிர்க்கட்சிகள் தொடங்கியபோது, பாஜக பீதியடைந்தது. மேற்கு வங்க தேர்தலில், திரிணாமுல் தலைவர்கள் மொஹுவா மொய்த்ரா மற்றும் டெரெக் ஓ பிரையன் ட்விட்டரில் பாஜகவை கிழித்துத் தொடங்கிவிட்டனர். பீகார் தேர்தலில், தேஜஸ்வி யாதவ் ட்விட்டர் மூலம் மோடி மற்றும் நிதீஷ் குமாரை அம்பலப்படுத்தினார்.

கட்டுக்குள் கொண்டுவர முயலும் பாஜக
கொரோனா பெருந்தொற்றை பாஜக அரசு எப்படிக் கையாண்டது என்பது சமூக வலைத்தளங்கள் மூலமாகவே மக்களுக்குத் தெரிய வந்தது. கங்கை நதியில் மிதந்து வந்த சடலங்கள், வாரணாசி மற்றும் குஜராத்தில் தொடர்ந்து எரிந்த சடலங்கள். மயானங்கள் வெளியே வரிசையாக இருந்த சடலங்கள் பாஜகவை உலகத்திற்கு அம்பலப்படுத்தியது. இதன் காரணமாகவே தற்போது அவர்கள் ட்விட்டர் உள்ளிட்ட டிஜிட்டல் தலங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயல்கின்றனர்" என்று கடுமையாக விமர்சித்து சிவசேனாவின் அதிகார்பூர்வ நாளேடான சாம்னாவில் கட்டுரை வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications