சட்டி சுட்டதடா! பொது சிவில் சட்டத்துக்கு உத்தவ் தாக்கரே சிவசேனா ஆதரவு- அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்!
மும்பை: பொது சிவில் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்க ல் செய்யப்பட்டால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆதரிக்கும் என அறிவித்துள்ளது. ஆம் ஆத்மியை தொடர்ந்து உத்தவ் தாக்கரே சிவசேனாவும் பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பதால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி அண்மையில் பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதங்கள் நடைபெறுகின்றன.

பொது சிவில் சட்டத்தை தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு கடுமையாக எதிர்க்கிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதனை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுக, இதுவரை நிலைப்பாடு எதனையும் அறிவிக்காமல் இருக்கிறது.
இதனிடையே எதிர்க்கட்சிகளில் டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, பொது சிவில் சட்டத்தை தொடக்க நிலையில் ஆதரிப்போம் என கூறியது. சில நாட்களுக்கு முன்னர்தான் பாட்னாவில் அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆம் ஆத்மியும் பங்கேற்றது. ஆனால் மத்திய பாஜக அரசின் பொது சிவில் சட்ட மசோதாவை ஆதரிப்போம் எனவும் ஆம் ஆத்மி அறிவித்தது. இது எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு முயற்சிக்கு பின்னடைவாக பார்க்கபட்டது.
தற்போது, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும் நாடாளுமன்றத்தில் பொது சிவில் சட்ட மசோதாவை ஆதரிப்போம் என அறிவித்துள்ளது. ஆம் ஆத்மியை தொடர்ந்து சிவசேனாவும் பொது சிவில் சட்ட மசோதாவை ஆதரிப்பது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளன.
இதனிடையே உத்தரகாண்ட் மாநில அரசு, பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைத்த குழு தமது அறிக்கையை மாநில அரசிடம் தாக்கல் செய்தது. உத்தரகாண்ட் மாநிலத்தில் விரைவில் பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications