ரூ.700க்கு மட்டன், ரூ.500க்கு பிட்சா வாங்குறீங்க..வெங்காயம் விலைக்கு கோவப்படுவது ஏன்? பாஜக அமைச்சர்
மும்பை: மகாராஷ்டிராவில் மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை இணை அமைச்சர் கபில் பாட்டீல். விலைவாசி உயர்வு குறித்துப் பேசியுள்ள கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பெருந்தொற்று பரவலுக்குப் பின்னர் பல்வேறு தரப்பினரும் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயர்வதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழலில் மத்திய இணை அமைச்சர் கபில் பாட்டீல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்தும். விலைவாசி உயர்வு குறித்தும் பேசியுள்ள கருத்துகள் தற்போது இணையத்தில் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்
மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி மக்களவை தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கபில் பாட்டீல். இவர் தற்போது மத்திய அமைச்சரவையில் பஞ்சாயத்து ராஜ் துறை இணை அமைச்சராக உள்ளார். தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கபில் பாட்டீல், "பொறுத்திருந்து பார்ப்போம், ஒருவேளை 2024க்குள் ஏதாவது பெரிய விஷயம் நடக்கலாம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) இந்தியாவின் ஒரு பகுதியாக மாறும் என்று நாம் எதிர்பார்ப்பதில் எந்தவொரு தவறும் இல்லை.

நம்புகிறேன்
பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரால் மட்டுமே நாட்டுக்காக இதுபோன்ற கடினமான விஷயங்களைச் சாதிக்க முடியும். சிஏஏ, 370 மற்றும் 35 ஏ பிரிவுகள் ரத்து உள்ளிட்ட துணிச்சலான முடிவுகளை எடுத்தது பிரதமர் மோடி தலைமையிலான அரசு தான். எனவே, பிரதமர் மோடி, இந்த நாட்டை தொடர்ந்து வழிநடத்த வேண்டும். 2024ஆம் ஆண்டுக்குள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (பிஓகே) மீண்டும் இந்தியாவுக்கு வரும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

விலைவாசி உயர்வு
ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் உடனடியாக மீட்கப்பட வேண்டும் அப்போது தான் காஷ்மீர் பிரச்சினைக்கு நமக்கு நிரந்தரமான ஒரு தீர்வு கிடைக்கும். இதைக் காங்கிரஸ் கட்சியால் ஒருபோதும் செய்ய முடியாது பிரதமர் மோடியால் மட்டுமே இதைச் செய்ய முடியும். இப்படி பெரிய பணிகள் நம் முன் இருக்கும் போது, நாம் வெங்காயம், உருளைக்கிழங்கு விலைகள் உயர்வது குறித்து யோசித்துக் கொண்டிருக்க முடியாது.

மட்டன் விலை
நாட்டில் உள்ள மக்கள் மட்டனை 700 ரூபாய்க்கும், பீட்சாவை 500-600 ரூபாய்க்கும் வாங்குகிறார்கள்.. ஆனால் வெங்காயம் 10 ரூபாய்க்கும், தக்காளி 40 ரூபாய்க்கும் உயர்ந்தால் விலைவாசி உயர்ந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். விலைவாசி உயர்வு வேண்டும் என யாரும் கூற மாட்டார்கள். ஆனால் வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற காய்கறி விலைகளைக் குறைக்க நரேந்திர மோடி பிரதமராகவில்லை.

பிரதமரைக் குறை சொல்ல மாட்டீர்கள்
இந்த பொருட்களின் விலையேற்றத்திற்கான காரணத்தை நீங்கள் புரிந்து கொண்டால் நீங்கள் பிரதமர் மோடியை ஒருபோதும் குறை சொல்ல மாட்டீர்கள். நாம் முதலில் நாட்டைக் காப்பாற்ற வேண்டும். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நாட்டைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்" என்று அவர் தெரிவித்தார். மத்திய இணை அமைச்சரின் இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டிகில் உள்ளது.












Click it and Unblock the Notifications