இந்துக்களே விழித்தெழுங்கள்.. அமைதி உங்களை காப்பாத்தாது.. திடீரென கொந்தளித்த நடிகை காஜல் அகர்வால் - பின்னணி
மும்பை: ‛இந்துக்களே விழித்து கொள்ளுங்கள். அமைதியாக இருப்பது ஒருபோதும் உங்களை காப்பாற்றாது'' என்று நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப்படங்களில் நடித்து வந்தவர் காஜல் அகர்வால். கடந்த 2020ம் ஆண்டில் கவுதம் கிச்லு என்பவரை காஜல் அகர்வால் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

திருமணத்துக்கு பிறகு நடிகை காஜல் அகர்வால் திரைப்படங்களில் நடிக்கவில்லை. அதேவேளையில் காஜல் அகர்வால் சமூக வலைதளங்களில் அடிக்கடி பதிவுகளை செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் தான் காஜல் அகர்வால் பதிவிட்ட பதிவு ஒன்று அதிக கவனம் பெற்றுள்ளது. காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட ஒரு மனிதனின் உடலை காட்டும் சுவரொட்டியை அவர் பகிர்ந்திருந்தார். அந்த சுவரொட்டியில் ‛‛வங்கதேச இந்துக்கள் மீது அனைவரின் பார்வையும் உள்ளது. இந்துக்களே விழித்தெழுங்கள்! அமைதியாக இருப்பது உங்களைக் காப்பாற்றாது'' என எழுதப்பட்டுள்ளது.
இந்த பதிவின் பின்னணியில் வங்கதேசத்தில் நடக்கும் வன்முறையாகும். வங்கதேசத்தில் தொடர்ந்து வன்முறை நடந்து வருகிறது. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸால் அதனை தடுக்க முடியவில்லை. குறிப்பாக இந்து மதத்தை சேர்ந்தவர்கள் குறிவைத்து தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.
சமீபத்தில் தான் மைமன்சிங் பகுதியை சேர்ந்த இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் என்பவர் தீயிட்டு எரித்து கொல்லப்பட்டார். இவர் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். வங்கதேசத்தில் வெடித்த வன்முறையில் பொதுவெளியில் அவர் தீயிட்டு எரித்து கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி தான் நடிகை காஜல் அகர்வால் இந்த பதிவை செய்துள்ளார். வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடக்கும் தாக்குதல் சம்பவத்துக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இந்துக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வங்கதேச இடைக்கால அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
மேலும் பல பிரபலங்களும் வங்கதேச இந்துக்கள் மீதான வன்முறைக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகை காஜல் அகர்வாலும் இந்த பதிவை செய்துள்ளார். முன்னதாக விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்பை சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தீபு சந்திர தாஸின் படுகொலையை கண்டித்து டெல்லியில் உள்ள வங்கதேசத்தின் தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர்.
மேலும் தற்போதும் கூட வங்கதேசத்தில் வன்முறை அடங்கவில்லை. தொடர்ந்து நடந்து வருகிறது. தீபு சந்திர தாஸை தொடர்ந்து கடந்த 24ம் தேதி இன்னொரு இந்து இளைஞரும் கொலை செய்யப்பட்டார். வங்கதேசத்தின் ராஜ்பப்ரி மாவட்டத்தை சேர்ந்த அம்ரித் மாண்டல் என்ற சாம்ரத் எனும் 29 வயது இளைஞர் கொல்லப்பட்டார்.
டிசம்பர் 24ம் தேதி இரவு பன்ஷா உபஜில்லாவில் உள்ள ஹோசைன்டங்கா பழைய மார்க்கெட்டில் ஒரு கும்பல் அவரை கொன்றது. இதனால் தொடர்ந்து இந்துக்களுக்கு எதிரான வன்முறை நீடித்து வரும் நிலையில் பலரும் அதற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications